சிறந்த படங்களுக்கு அங்கீகாரம்
தமிழ் சினிமாவின் சிறப்புக்கு சான்று படைத்த 'கெய்ப் விருதுகள் 2023'
ஒரு விதையில் வளரும் ஆலமரம் எண்ணற்ற பறவைகளின் நம்பிக்கை. அந்த நம்பிக்கையை பல்வேறு துறைகளில் விதைத்து, வளர்ச்சிக்கான பாதையைக் காட்டி, ஒவ்வோர் ஆண்டும் உணர்வால் நம்மை நெகிழ வைக்கும் மகத்தான படைப்புகளை அடையாளம் காண்கிறது கெய்ப் விருதுகள் 2023. இந்த முறை 5-ஆவது ஆண்டாக நல்ல தமிழ் சினிமாக்களை அடையாளம் கண்டு அதன் படைப்பாளிகளை அங்கீகாரம் செய்துள்ளது இந்த அமைப்பு.
தமிழ் சினிமாவில் கடந்த ஆண்டு பேசு பொருளாக இருந்த "அயோத்தி', "கூழாங்கல்' என இரு படங்களுக்கும் விருது அறிவித்து கௌரவம் செய்யப்பட்டுள்ளது. "அயோத்தி' என்று டைட்டில் இருந்தாலும், மதவாதம் உள்ளிட்ட பிரச்னைகளை ஆழமாகப் பேசுவதற்கான இடமிருந்தும், அந்தப் பக்கம் பெரிதாகச் செல்லாமல், மனிதம் பற்றிய ஒரு எமோஷனல் கதையாக மட்டுமே படத்தை நகர்த்தியிருக்கிறார் இயக்குநர் மந்திரமூர்த்தி.
அதனுடன் சட்டச் சிக்கல்கள், அதனால் அவதியுறும் எளிய மக்கள், சிக்கலான விதிமுறைகள் இருந்தாலும் அதையும் கடந்து துளிர்க்கும் மனிதம் என உணர்வுபூர்வமான காட்சிகள் படம் நெடுகவே நிரம்பிக் கிடக்கின்றன. சில இடங்களில் நாடகத்தனமும் சினிமாத்தனமும் வெளிப்பட்டாலும் பரபரப்பான திரைக்கதை அந்தக் குறையை மறக்கடிக்கச் செய்திருக்கிறது.
Advertisement
நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விருதுகள் பெற்ற அயோத்தி இயக்குநர் மந்திர மூர்த்தி பேசியபோது... ""படம் ரீலிஸ் ஆகி ஒரு வருடம் ஆகிறது தற்போது வரை பலவிருதுகள் வந்துகொண்டுதான் இருக்கிறது இந்த விருப்பெற்றதும் மகிழ்ச்சி, நடிகர் சசிகுமார் மற்றும் உடன் பணிபுரிந்த
அனைவருக்கும் நன்றிகள்'' என்றார். அது போல் கூழாங்கல் பட்த்துக்கும் சிறந்த படத்துக்கான விருது வழங்கப்பட்டது. ஆணாதிக்க மனோபாவத்தால் அல்லல்படும் குடும்ப அமைப்பின் பரிதாப உலகத்தில் நுழைந்து, அவர்களின் இயல்பு வாழ்க்கையின் சில கணங்களை எடுத்துக்காட்டியதில் இயக்குநர் பி.எஸ்.வினோத் ராஜ் எழுதியது புதுக்கவிதை.
ஆஸ்கர் தேர்வு வரைக்கும் போய் "கூழாங்கல்' கொண்டு வந்து சேர்த்தது தமிழ் சினிமாவிற்குப் பெருஞ்சிறப்பு. விருது பெற்ற வினோத்ராஜ் பேசிய போது.... "" சிறந்த திரைப்படத்திற்காக விருது பெற்றதில் மகிழ்ச்சி, ஒரு இயக்குனராய் இல்லாமல் சக இயக்குநர் இயக்கிய அயோத்தி படம் பார்த்து தனியாக நிறைய அழுது இருக்கிறேன்'' என்று நெகிழ்ந்தார்.