அசத்தும் அரசுப் பள்ளி!
பல அரசுப் பள்ளிகளில் அர்ப்பணிப்பு உணர்வோடு ஆசிரியர்கள் பணியாற்றி, மாணவர்களை ஊக்கப்படுத்தி, அவர்களது தனித்திறமைகளை வெளிக்கொணர்கின்றனர்.
பெ.பெரியார்மன்னன்
பல அரசுப் பள்ளிகளில் அர்ப்பணிப்பு உணர்வோடு ஆசிரியர்கள் பணியாற்றி, மாணவர்களை ஊக்கப்படுத்தி, அவர்களது தனித்திறமைகளை வெளிக்கொணர்கின்றனர். இத்தகைய பள்ளிகளில் ஒன்றுதான், சேலம் மாவட்டம், வாழப்பாடி அருகிலுள்ள துக்கியாம்பாளையம் கிராமத்தில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியாகும்.
2010-11-ஆம் கல்வியாண்டில் தொடங்கப்பட்ட இந்தப் பள்ளியில், ஆறாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரையில் 400 மாணவ, மாணவியர் படித்து வருகின்றனர். தலைமையாசிரியர் வெங்கடாஜலம் தலைமையிலான 18 ஆசிரியர்கள் குழுவாக இணைந்து, பாடங்களோடு கலைத்திறன், விளையாட்டு, சுற்றுச்சூழல், மனிதநேயம், ஒழுக்கம் சார்ந்த சமூக நலக் கல்வியைக் கற்பித்து வருகின்றனர்.
Advertisement
இதுகுறித்து வெங்கடாஜலத்திடம் பேசியபோது:
'விண்மீன்கள் திட்டத்தின் கீழ் மாணவர்களை ஊக்கப்படுத்தி, கவிதை, கட்டுரை, விடுகதைகள் எழுதவும், ஓவியங்கள் வரையவும் பயிற்சி அளிக்கிறோம். இளம் எழுத்தாளர்கள் பலரை உருவாக்கியுள்ளோம். இவர்களின் படைப்புகள், பள்ளிக்கல்வித் துறை நடத்தும் மாணவர் இதழான 'தேன்சிட்டு'விலும், பிற இதழ்களிலும் வெளியாகியுள்ளன.
பள்ளியில் கலைத்திறன் போட்டிகளை நடத்தி மாணவர்களுக்குப் பரிசுகள், பாராட்டுச்சான்றிதழ்களை வழங்குவதோடு மாநில அளவிலான போட்டிகளில் பங்கேற்கச் செய்கிறோம்.
மாணவர்களுக்கு சமூக அக்கறை, மனித நேயம், ஒழுக்கக் கட்டுப்பாடு, சுற்றுச்சூழல் பாதுகாப்பின் முக்கியத்துவம் உள்ளிட்டவற்றைப் போதிக்கும் நோக்கில், சாரணர் இயக்கம், பசுமை இயக்கம் உள்ளிட்ட மன்றங்களைத் தொடக்கி, உரியவாறு பயிற்சிகளையும் அளித்து வருகிறோம்.
கணினிப் பயிற்சி அளித்து கணினி வழியில் நடத்தப்படும் விநாடி - வினாப் போட்டிகளில் பங்கேற்கச் செய்து, தொழில் நுட்பத்தின் முக்கியத்துவத்தை உணர்த்துகிறோம்.
அறிவியல் ஆசிரியர் வீ. பெரியசாமியின் முயற்சியால் செயல்வழிக் கற்பித்தல் முறையில் மாணவர்களுக்குப் பாடங்கள் கற்பிக்கப்பட்டு, மத்திய அரசின் இன்ஸ்பயர் விருது பெற தயார்படுத்துகிறோம்.
அறிவியல் கருவிகள் கண்டுபிடிப்புப் போட்டியில், எங்கள் பள்ளி மாணவர்கள் பரிசுகளைப் பெற்றனர். இதோடு, மலேசியா நாட்டுக்கும் இலவச கல்விப் பயணம் சென்று வந்ததும் பெருமையாகும்.
மாணவர்களின் பிறந்த நாளில் பலன் தரும் மரக்கன்றுகளை வழங்கி, மரம் வளர்ப்பின் முக்கியத்துவம், நன்மைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். சுற்றுச்சூழல் தினம், புவி தினம், தண்ணீர் தினம் உள்ளிட்ட சிறப்பு தினங்களில் பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகளை நடுகிறோம். பள்ளி வளாகத்தைத் தூய்மையாகப் பராமரித்து பசுஞ்சோலையாக மாற்றும் முயற்சியை மேற்கொண்டு வருகிறோம்'' என்கிறார் வெங்கடாஜலம்.