முகப்பு
ஞாயிறு கொண்டாட்டம்

தென்னம்பிள்ளை பரிசு...

புதுக்கோட்டை மாவட்ட அரசு பசுமைக் குழுவின் உறுப்பினர் கண்ணன் என்கிற ராதாகிருஷ்ணன், சுமார் 20 ஏக்கரில் ஒருங்கிணைந்த பண்ணைய முறையில் விவசாயம் செய்து வரும் இயற்கை விவசாயி.

Updated On : 8 பிப்ரவரி 2026, 4:04 pm IST
பகிர்:

புதுக்கோட்டை மாவட்ட அரசு பசுமைக் குழுவின் உறுப்பினர் கண்ணன் என்கிற ராதாகிருஷ்ணன், சுமார் 20 ஏக்கரில் ஒருங்கிணைந்த பண்ணைய முறையில் விவசாயம் செய்து வரும் இயற்கை விவசாயி. பிரபல உணவக உரிமையாளரான இவர், பல அமைப்புகளில் பொறுப்புகளை வகிப்பவர்.

இவர் நிகழ்ச்சிகள் மட்டுமின்றி, துக்க நிகழ்வுகளுக்குச் செல்லும்போது கையில் நன்கு வளர்ந்த தென்னங்கன்று ஒன்றையும் எடுத்துச் செல்கிறார்.

இந்தச் செயல் குறித்து அவர் கூறியது:

Advertisement

Advertisement

'ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு, 'மரம் நண்பர்கள்' எனும் அமைப்பை புதுக்கோட்டையில் தொடங்கினேன். அப்போதிருந்தே, நிகழ்ச்சிக்குப் பரிசுகளை அளிக்க நாட்டு மரக்கன்றுகளை வழங்கத் தொடங்கினேன். பல இடங்களில் அந்தக் கன்றுகள் மண்டபங்களைவிட்டு வீடுகளுக்கே கொண்டு செல்லப்படவில்லை என்பதை அறிந்தேன்.

அதன்பிறகுதான் தென்னம்பிள்ளை வழங்குவது தொடங்கப்பட்டது. பிற மரக்கன்றுகளைப் போல இதனைக் கருதமாட்டார்கள். 'சென்ட்டிமென்ட்'டாக கட்டாயம் வீட்டுக்குக் கொண்டு சென்று நட்டு வைக்கிறார்கள், வளர்க்கிறார்கள்.

ஒரு குடும்பத்தின் தாத்தா இறந்தபோது நான் கொண்டு போய் கொடுத்த தென்னம்பிள்ளையை நட்டு வைத்திருந்தார்கள். பேத்தியின் திருமணத்தின்போது சென்றபோது, அதைச் சொல்லி- வீட்டின் பின்புறம் அழைத்துச் சென்று காட்டி- மகிழ்ச்சியுடன் நினைவு கூர்ந்தார்கள்.

ஒருமுறை தென்னம்பிள்ளை கிடைக்கவில்லை. 'எப்போதும் தென்னம்பிள்ளையோடு வருவீர்களே' என திருமண நிகழ்ச்சியில் கேட்டேவிட்டார்கள். எனவே, வாரத்துக்கு 10 தென்னம்பிள்ளைகளை முன்பே வாங்கி வைத்து

விடுகிறேன். உறவினர்கள் நிகழ்ச்சிகளுக்குச் செல்லும்போதும் தென்னம்பிள்ளையோடு, வழக்கமான செய்முறைகளையும் தவறுவதில்லை. அதேபோல நண்பர்கள் நிகழ்ச்சிக்குச் செல்லும்போது தென்னம்பிள்ளையோடு வழக்கமான பரிசு, மொய் பணம் தனியே கொடுத்துவிடுகிறேன்.

கஜா புயலின்போது எங்கள் தோப்பில் இருந்த 150 மரங்கள் காலியாகின. மனரீதியாகச் சோர்ந்து போய் மருத்துவமனையில் சேர்ந்துவிட்டேன். அதன்பிறகு எனது தந்தை சண்முக பழனியப்பன்தான், 'மரங்களை வளர்த்துக் கொள்ளலாம்... கவலைப்படாதே' எனத் தேற்றினார். இப்போது அங்கே 1,000 தேக்கு மரக்கன்றுகளை நட்டு வளர்க்கிறோம். அசுப காரியங்களுக்கு தென்னம்பிள்ளை வழங்கும்போது தொடக்கத்தில் ஒரு மாதிரி பார்த்தார்கள். இப்போது அப்படியல்ல. நல்ல வரவேற்பு இருக்கிறது. மறைந்தவர்களின் நினைவாக அதனைக் கருதுகிறேன்.

ஒரு நல்ல தரமான தென்னம்பிள்ளை ரூ. 250-க்கு வாங்குகிறேன். ஆனால், மனநிறைவும் சேர்ந்தே கிடைக்கிறது. இவ்வாறாக, , 2026 பிப். 3-ஆம் தேதி வரையிலான கடந்த ஐந்து ஆண்டுகளில் மொத்தம் 1,596 தென்னம்பிள்ளைகளைக் கொடுத்திருக்கிறேன்' என்கிறார் கண்ணன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.