குரோம்பேட்டையில் குடமுழுக்கு விழா!
நமது பாரத புண்ணிய பூமியில் பல்வேறு நகரங்கள் பல சிறப்புகளைப் பெற்றவையாகத் திகழ்கின்றன.
நமது பாரத புண்ணிய பூமியில் பல்வேறு நகரங்கள் பல சிறப்புகளைப் பெற்றவையாகத் திகழ்கின்றன. அதனில் காஞ்சிபுரம் தமிழ்நாட்டு வழிபாட்டுத் தலங்களில் முதன்மையானது. ஏழு மோட்சபுரிகளில் சத்யவ்ரத ஷேத்ரம் எனும் காஞ்சிபுரம் ஒன்றாகும். இக்காஞ்சிபுரம் மாவட்டத்தில் தாம்பரம் தாலுக்காவில் பல்லவபுரம் நகராட்சிக்கு உள்ளடங்கியது புராண பெயர் கொண்ட அஸ்தினாபுரம். இவ்வட்டத்தில் புருஷோத்தம நகரில் உள்ளது ஸ்ரீ விஜய கணபதி ஸ்ரீ லட்சுமி நாராயணப்பெருமாள் ஆலயம்.
முதன் முதலில் இப்பகுதியில் உருவானதுதான் இந்த ஸ்ரீ விஜய கணபதி ஆலயம். அதுவும் காஞ்சி மகாசுவாமிகளின் அருளாசியுடன் அவரது முன்னிலையிலேயே 1966ஆம் வருடம் கும்பாபிஷேகம் நடந்தேறியது என்பது பெரிய சிறப்பு.
இதற்கு அப்போதைய அகோபில மடம் ஸ்ரீமத் அழகிய சிங்கரின் அனுகிரக ஆசிகளும் கிடைக்கப்பெற்றது. அதற்கு அடுத்த வருடம் ஸ்ரீ லட்சுமி நாராயணப்பெருமாள் பிரதிஷ்டை செய்யப்பட்டு சம்ப்ரோஷண வைபவம் நடந்தேறியது. மிகவும் சௌந்தர்யத்துடன் விளங்கும் இந்த மூர்த்தி, திண்டிவனம் தாலுக்காவில் வானூருக்கு அருகில் உள்ள கழுப்பெரும்பாக்கம் என்ற ஊரில் ஒரு புளிய மரத்தின் அருகில் பூமியிலிருந்து கண்டெடுக்கப்பட்டது. அங்கு சிறிது காலம் பூஜை ஆராதனைகள் நடங்தேறியது.
பிறகு குரோம்பேட்டை புருஷோத்தம நகரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். இந்த மூர்த்தியை காஞ்சி மகாசுவாமிகள், அகோபில மடம் ஜீயர் ஸ்ரீரங்கம் ஸ்ரீமத் ஆண்டவன் (குடந்தை) போன்ற ஆசார்ய புருஷர்கள் நேரில் பார்த்து மிகுந்த பரவசம் கொண்டு பிரதிஷ்டை செய்வதற்கு அனுகிரகித்தார்கள். தொடர்ந்து 1969 ஆம் வருடம் ஸ்ரீ விசாகப் பெருமான் சந்நிதி உருவானது. இந்த முருகனின் கருணை அளப்பரியது.
கடந்த 48 வருடங்களில் இந்த ஆலயத்தின் வளர்ச்சி படிப்படியாக உயர்ந்து மேலும் பல சந்நிதிகள் கட்டப்பட்டு தற்போது சிலா ரூபமாகவும், உற்சவ மூர்த்திகளாகவும் பல்வேறு தெய்வங்கள் அனுகிரகித்து வருகிறார்கள். நமக்கு வழிகாட்டியாக வாழ்ந்த ஆசார்ய பெருமக்களுக்கும் ஆழ்வார்களுக்கும் இங்கு சந்நிதிகள் உண்டு.
ஆலய நிர்வாகத்தை புருஷோத்தம நகர் ஆலய பரிபாலன சபா என்ற அமைப்பு திறம்பட நடத்தி வருகிறது. ஒரு சைவ, வைணவ ஆலயத்துக்கு உண்டான அனைத்து விழாக்களும் இவ்வாலயத்தில் கொண்டாடப்படுகிறது. முக்கிய தினங்களில் உற்சவ மூர்த்திகளின் வீதி உலா பவனியும் நடைபெறுகிறது. 2003 ஆம் வருடம் நடந்த கும்பாபிஷேகத்திற்குப் பிறகு தற்போது இந்த ஆலயத்தில் தளம் அமைத்தல் உட்பட பல்வேறு திருப்பணி வேலைகள் பக்தர்களின் நன்கொடையுடன் நடந்து முடிந்துள்ளன.
இவ்வாலயத்தில் காஞ்சி சங்கராச்சாரியார் சுவாமிகள் அனுகிரகத்துடனும் மற்றும் சைவ, வைணவ, மாத்வ பீடாதிபதிகள் அனுகிரகத்தாலும் நங்கநல்லூர் ஸ்ரீலஸ்ரீ காமாட்சி சுவாமிகள் முன்னிலையில் அருள்மிகு ஸ்ரீ விஜய கணபதி மற்றுமுள்ள பரிவார மூர்த்திகளுக்கும், அகோபில ஸ்ரீமத் அழகிய சிங்கர் அனுகிரகத்துடன் ஸ்ரீ முஷ்ணம் ஸ்ரீமத் ஆண்டவன் சுவாமிகள் முன்னிலையில் ஸ்ரீ லஷ்மி நாராயணப் பெருமாளுக்கும் மற்றுமுள்ள மூர்த்திகளுக்கும் ஏப்ரல் 13 ம் தேதி ஞாயிறு அன்று காலை 10 மணிக்கு ஜீர்ணோத்தாரண அஷ்டபந்தன மகாகும்பாபிஷேகம் மற்றும் மகா சம்ப்ரோஷண வைபவம் நடைபெறுகிறது.
இதனையொட்டிய பூர்வாங்க பூஜை,ஹோமங்கள் ஏப்ரல் 10 ம் தேதி ஆரம்பமாகிறது.
தொடர்புக்கு: 044- 22233454