ஆறாம் வீட்டின் அசுப பலம்!

எனக்கு 73 வயதாகிறது. கடந்த நான்கு வருடங்களாக குடும்பத்தை விட்டுப் பிரிந்திருக்கிறேன்.
Updated on
2 min read

எனக்கு 73 வயதாகிறது. கடந்த நான்கு வருடங்களாக குடும்பத்தை விட்டுப் பிரிந்திருக்கிறேன். சுக்கிர தசை நடப்பதால் வாழ்க்கை சிறப்பாக இருக்கும் என்று எதிர்பார்த்திருந்தேன். பழைய வீட்டை விற்றுவிட்டு புதிய வீடு வாங்க வேண்டும். இது எப்பொழுது நடக்கும்? குடும்பத்துடன் இறுதிவரை இணைந்து வாழ என்ன பரிகாரம் செய்ய வேண்டும்? ஆயுள் பற்றியும் கூறவும். 

சங்கர், கும்பகோணம்.

உங்களுக்கு தனுசு லக்னம், துலாம் நவாம்சம், மிதுன ராசி, திருவாதிரை நட்சத்திரம். லக்னம், சுக ஸ்தானமான நான்காம் வீட்டிற்கும் அதிபதியான குருபகவான் அயன ஸ்தானமான பன்னிரண்டாம் வீட்டில் சனி பகவானின் சாரத்தில் (அனுஷ நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் கன்னி ராசியை அடைகிறார். 

குரு பகவான் கேந்திராதிபத்ய தோஷம் நீங்கப் பெற்று ஐந்தாம் பார்வையாக தன் ஆட்சி வீடான சுக ஸ்தானத்தையும், ஏழாம் பார்வையாக ருணம், ரோகம், சத்ரு ஸ்தானமான ஆறாம் வீட்டையும் அங்கு அஷ்டலட்சுமி யோகம் பெற்றுள்ள ராகு பகவானையும், ஒன்பதாம் பார்வையாக அஷ்டம ஸ்தானமான எட்டாம் வீட்டையும் அங்கமர்ந்திருக்கும் நீச்சபங்க ராஜயோகம் பெற்றிருக்கும் பூர்வ புண்ணிய புத்திர புத்தி ஸ்தானாதிபதியான செவ்வாய் பகவானையும் (குருமங்கள யோகம்) ஆயுள்காரகர் மற்றும் குடும்ப ஸ்தானமான இரண்டாம் வீட்டிற்கும், தைரிய ஸ்தானமான மூன்றாம் வீட்டிற்கும் அதிபதியான சனி பகவானையும் பார்வை செய்கிறார்.
செவ்வாய் பகவான்  நவாம்சத்தில் கும்ப ராசியிலும், சனி பகவான் நவாம்சத்தில் மீன ராசியிலும் அமர்ந்திருக்கிறார்கள்.
ஆயுள்காரகர் ஆயுள் ஸ்தானத்தில் சுப பலம் பெற்று அமர்ந்திருப்பதால் "தீர்க்காயுள் உண்டு' என்று கூறவேண்டும். களத்திர நட்பு ஸ்தானமான ஏழாம் வீட்டிற்கும், தொழில் ஸ்தானமான பத்தாம் வீட்டிற்கும் அதிபதியான புத பகவான் லாப ஸ்தானமான பதினொன்றாம் வீட்டில் குரு பகவானின் சாரத்தில் (விசாகம் நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் மேஷ ராசியை அடைகிறார். 
அவருடன் நீச்சபங்க ராஜயோகம் பெற்றிருக்கும் பாக்கியாதிபதி மற்றும் ஒன்பதாம் அதிபதியான சூரிய பகவானும் (புத ஆதித்ய யோகம்) ராகுபகவானின் சாரத்தில் (சுவாதி நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் மீன ராசியை அடைகிறார். 
ருணம், ரோகம், சத்ரு ஸ்தானமான ஆறாம் வீட்டிற்கும், லாப ஸ்தானமான பதினொன்றாம் வீட்டிற்கும் அதிபதியான சுக்கிர பகவான் அயன ஸ்தானத்தில் குரு பகவானின் சாரத்தில் (விசாகம் நட்சத்திரம்) விபரீத ராஜயோகம் (ஆறாமதிபதி பன்னிரண்டாம் வீட்டில் இருப்பது) பெற்று அமர்ந்திருக்கிறார். 
அஷ்டம ஸ்தானமான எட்டாம் வீட்டிற்கு அதிபதியான சந்திர பகவான் களத்திர நட்பு ஸ்தானமான ஏழாம் வீட்டில் ராகு பகவானின் சாரத்தில் (திருவாதிரை நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் கும்ப ராசியை அடைகிறார். 
ராகு பகவான் ஆறாம் வீட்டில் சூரிய பகவானின் சாரத்தில் (கிருத்திகை நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் மகர ராசியையும், கேது பகவான் பன்னிரண்டாம் வீட்டில் குரு பகவானின் சாரத்தில் (விசாகம் நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் கடக ராசியையும் அடைகிறார்கள். 
லக்னாதிபதி மறைவு பெற்று ஆறாமதிபதியுடனும் கேது பகவானுடனும் இணைந்திருப்பது குறை. மேலும் லக்னமானது ஆறாமதிபதியின் சாரத்தில் உண்டாகி இருக்கிறது.
ஆறாமதிபதி லக்னாதிபதியின் சாரத்தில் அமர்ந்திருக்கிறார். இத்தகைய நிலையைக் கொண்டு சுக்கிர பகவான் லக்னாதிபதியான குரு பகவானை விட பலம் கூடப் பெற்றிருக்கிறார் என்று புரிந்து கொள்ள வேண்டும். 
உங்களுக்கு 2015 ஆம் ஆண்டு முதல் சுக்கிர பகவானின் தசை நடக்கத் தொடங்கியுள்ளது. பொதுவாக முதலில் ஆறாம் வீட்டின் ஆதிபத்தியமும், பிறகு லாப ஸ்தானத்தின் ஆதிபத்தியமும் வேலை செய்யும். அதோடு சுக்கிர பகவானின் தசை பிற்கூறிலேயே  பலன்தரும். அதனால் அடுத்த ஆண்டு அக்டோபர் மாதத்திற்குப் பிறகு குடும்பத்துடன் இணைவீர்கள். பழைய வீட்டை விற்று விட்டு புது வீடும் வாங்குவீர்கள் பிரதி வெள்ளிக்கிழமைகளில் மஹாலட்சுமியை வழிபட்டு வரவும். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com