
2025 ஆண்டுக்கான குருப்பெயர்ச்சி வாக்கிய பஞ்சாங்கத்தின்படி மே 11ஆம் தேதியும், திருக்கணித பஞ்சாங்கத்தின்படி மே 14ஆம் தேதியும் பெயர்ச்சியாகின்றது.
மீனம் (பூரட்டாதி 4-ம் பாதம் முதல் உத்திரட்டாதி, ரேவதி முடிய)
இதுவரை உங்களது தைரிய வீர்ய ஸ்தானத்தில் இருந்த குரு பகவான் இனி உங்களின் சுக ஸ்தானத்தில் சஞ்சரிக்கத் தொடங்குகிறார். இதனால் மனக் குழப்பங்களிலிருந்து விடுபட்டு நேரான வகையில் சிந்திப்பீர்கள். அரசாங்கத்தில் முக்கியமானவர்களின் ஆதரவு கிடைக்கும். அனைவரிடமும் சுமுகமான உறவு தொடரும். சகோதர, சகோதரிகள் பகைமை மறைந்து நட்பு பாராட்டுவார்கள். வருமானம் படிப்படியாக உயரத் தொடங்கும். செய்தொழிலில் முன்னேற்றத்தைக் காண்பீர்கள். உங்களின் வார்த்தைகளுக்கு மதிப்பு அதிகரிக்கும். புத்திசாலித்தனமாக முதலீடுகளைச் செய்வீர்கள். ஆன்மிகத்தில் அதிக ஈடுபாடு உண்டாகும். வாழ்க்கையில் இருந்த சலிப்புகள் மறையும். உங்களுக்குக் கீழ் பணிபுரிபவர்கள் உங்களின் பேச்சைக் கேட்டு நடப்பார்கள்.
குரு பகவானின் பார்வை எட்டாம் ராசியின் மீது படிகிறது. இதனால் நெடுநாட்களாக வாட்டி வதைத்துக்கொண்டிருந்த உடல் உபாதைகள் நீங்கும். சண்டை சச்சரவுகள் இல்லாமல் செயல்படுவீர்கள். ஆனாலும் முழுமையான வெற்றிகளைப் பெற முடியாமல் போகும். ஆன்மிக அறிவை வளர்த்துக்கொள்வீர்கள். இளைய சகோதர சகோதரிகளின் உதவிகளைப் பெறுவீர்கள். வாழ்க்கை வசதிகளை மேம்படுத்திக்கொள்வீர்கள். உழைப்புக்கேற்ற ஊதியத்தைப் பெறுவீர்கள். மனதிலிருந்த தீய எண்ணங்கள் மறைந்து நேர்மையாக சிந்திக்கத் தொடங்குவீர்கள்.
குரு பகவானின் பார்வை தொழில் ஸ்தானத்தின் மீது படிகிறது. இதனால் செய்தொழிலில் புதிய யுக்திகளைப் புகுத்துவீர்கள். வாக்கு சாதுர்யத்தால் அனைவரையும் வெற்றி கொள்வீர்கள். உங்கள் ஆசைகள் அனைத்தும் சுலபமாகப் பூர்த்தியாகும். தர்ம காரியங்களில் ஈடுபடுவீர்கள். கடன் தொல்லைகளிலிருந்து விடுபடுவீர்கள்.
குரு பகவானின் பார்வை உங்களின் அயனஸ்தானமான பன்னிரண்டாம் ராசியில் படிகிறது. இதனால் ஏமாற்றங்களிலிருந்து விடுபடுவீர்கள். அனைவரும் உங்களை மதித்து நடப்பார்கள். இழப்புகளைக் கண்டறிந்து அவற்றை உடனுக்குடன் சரிசெய்து விடுவீர்கள். கொடுத்த வாக்கை சிரமப்பட்டாவது காப்பாற்றிவிடுவீர்கள். கடன் தொல்லை இல்லாவிட்டாலும் பொருளாதாரம் சிறிது ஏற்ற இறக்கமாகவே இருக்கும்.
உத்தியோகஸ்தர்களுக்கு
வேலைப் பளு அதிகரித்தாலும் உங்களின் வேலைகளை சரியாகச் செய்து முடித்துவிடுவீர்கள். சக ஊழியர்களால் உங்களின் முன்னேற்றத்திற்குத் தடையாக இருப்பவர்களைக் கண்டறிந்து விலக்குவீர்கள். வருமானம் சீராக இருக்கும். சிறிய தடை ஏற்பட்டாலும் பதவி உயர்வு கிடைக்கும். மேலதிகாரிகள் உங்களுக்கு அனுசரணையாக நடந்துகொள்வார்கள்.
வியாபாரிகளுக்கு
திருப்தியாக வியாபாரத்தை நடத்துவீர்கள். மறைமுக எதிரிகளின் தொல்லைகள் நீங்கும். வாடிக்கையாளர்களின் விருப்பங்களையும், தேவைகளையும் எப்பாடுபட்டாவது பூர்த்தி செய்வீர்கள். வியாபாரத்தை தனித்தன்மையுடன் நேர்த்தியாகச் செய்வீர்கள். சிறிய முதலீடுகளைச் செய்து வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள்.
விவசாயிகளுக்கு
விளைச்சல் நல்லபடியாக இருக்கும். பழைய குத்தகை பாக்கிகளைத் திருப்பிச் செலுத்துவீர்கள். பூச்சிக்கொல்லிகளுக்கு செலவு செய்ய நேரிடும். பாசன வசதிகளில் கவனம் செலுத்துவீர்கள். கால்நடைகளுக்கு பராமரிப்பு செலவு செய்ய நேரிடும். சக விவசாயிகளுக்கு உதவிகளைச் செய்து அவர்களின் ஆதரவைத் தக்க வைத்துக்கொள்ளவும்.
அரசியல்வாதிகளுக்கு
கட்சியில் திறமைக்கேற்ற பொறுப்புகள் கிடைக்கும். நேரடியாகத் தொல்லைகள் கொடுத்தவர்கள் அடங்கிவிடுவார்கள். பிறரின் வலிமையை அறிந்து அதற்கேற்றார்போல் பேசுவீர்கள்.
கலைத்துறையினருக்கு
செய்தொழிலில் போட்டி பொறாமைகளை சந்தித்தாலும் உங்களின் முயற்சிகள் வெற்றி பெறும். நண்பர்களின் உதவியுடன் தொழிலில் புதிய நுட்பங்களை அறிந்துகொள்வீர்கள். அவர்களுடனான கூட்டு முயற்சியில் சில வெற்றிகளைக் காண்பீர்கள். சிலருக்கு புதிய வாகனச் சேர்க்கை உண்டாகும்.
பெண்மணிகளுக்கு
கணவரிடம் அன்பும், பாசமும் அதிகரிக்கும். உறவினர்கள் உங்களை அனுசரித்து நடந்துகொள்வார்கள். பண வரவு சீராக இருக்கும். உடல் ஆரோக்யம் மேம்படும். ஆன்மிகத்தில் நம்பிக்கையுடன் ஈடுபடுவீர்கள். உங்களால் குடும்பம் முன்னேற்றம் அடையும்.
மாணவமணிகளுக்கு
புத்திசாலித்தனமாக நடந்துகொள்வீர்கள். நல்ல மதிப்பெண்களைப் பெறுவீர்கள். அதிர்ஷ்ட வாய்ப்புகள் கிடைக்கும். நண்பர்களிடம் அனாவசியப் பேச்சு வேண்டாம்.
பூரட்டாதி - 4
சகோதரத்தின் வெளிநாடு பயணம் இனிதே நடைபெறும். சுயசார்பும் தன்னிறைவும் பெறுவீர்கள். தைரியம் பளிச்சிடும்.
உத்திரட்டாதி
புதிய வழக்குகளை சந்திக்க நேரிடலாம். நீண்ட நாட்களாக இருந்து வந்த பிரச்சனை நீங்கும். உடலில் சிறு சிறு உபாதைகள் ஏற்பட்டு மறையும். குழந்தைகளால் மகிழ்ச்சி உண்டாகும்.
ரேவதி
குடும்பத்தில் சிறு சிறு சிக்கல்கள் வந்து வந்து போகும். சிறைத்துறையில் உள்ளவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். பயணம் தொடர்பான தொழில்களில் லாபம் கிடைக்கும். கலைத்துறையினருக்கு நன்மைகள் நடக்கும்.
பரிகாரம்
செவ்வாய்க்கிழமை தோறும் அருகிலிருக்கும் முருகன் கோயிலுக்குச் சென்று வரவும். முடிந்தவர்கள் அருகிலிருக்கும் அறுபடை ஸ்தலங்களுக்குச் சென்று வாருங்கள்.