இந்தியாவின் இரண்டாவது பெரிய தொலைத் தொடர்பு நிறுவனமான வோடஃபோன் 2012-2013 நிதி ஆண்டில் பெற்ற லாபம் ரூ. 1,853 கோடியாக உயர்ந்துள்ளது என்று அந்த நிறுவனம் அறிவித்திருக்கிறது.
இங்கிலாந்தைச் சேர்ந்த வோடஃபோனின் துணை நிறுவனமான வோடஃபோன் இந்தியா, இது குறித்து செவ்வாய்க்கிழமை வெளியிட்டிருக்கும் செய்திக் குறிப்பில் தெரிவித்திருப்பது:
வோடஃபோன் இந்தியா 2011-2012 நிதி ஆண்டின்போது
ரூ. 503 கோடி லாபம் பெற்றிருந்தது. 2012-2013 நிதி ஆண்டில் இது மூன்று மடங்குக்கும் அதிகமாக உயர்ந்து, ரூ. 1,853 கோடியைப் பெற்றுள்ளது. சென்ற நிதி ஆண்டில் நிறுவனத்தின் மொத்த வருவாய் ரூ. 36,036 கோடியாக உள்ளது. இறுதிக் காலாண்டில் வாடிக்கையாளர் எண்ணிக்கை பெரிய அளவில் அதிகரிக்கவில்லை. மூன்றாம் காலாண்டு அளவில் புதிய தொலைத் தொடர்பு விதிமுறைகள் நடைமுறைக்கு வந்ததால் வாடிக்கையாளர் எண்ணிக்கை அதிகரிப்பை அது பாதித்தது. இதனைத் தொடர்ந்து நிறுவனத்தின் வருவாயையும் அது பாதித்தது.
வோடஃபோன் நிறுவனம் ரூ. 11,200 கோடி வருமான வரி பாக்கி செலுத்த வேண்டுமெனஇந்திய வருமான வரித் துறை கோரி வரும் விவகாரத்தை பொருத்தவரையில், இந்திய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி, சமரச உடன்பாடு ஒன்றை ஏற்படுத்திக் கொள்ள நிறுவனம் முயன்று வருகிறது.
ஆனால் இந்த விஷயத்தில் உடன்படிக்கை ஏற்படுத்திக் கொள்ளும் சாத்தியம் உள்ளதா என்பது தெரியவில்லை. மேலும், இரு தரப்புக்கும் ஏற்புடைய சமரசத்துக்கு வாய்ப்புள்ளதா என்பதையும் இப்போது கூற முடியாது என்று அந்நிறுவனம் வெளியிட்டிருக்கும் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.








