ஜெய்ராம் கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் படம் "மகாராஜா'. அர்ஜுன் மற்றும் இயக்குநர் பரமேஷ்வர் ஆகியோரிடம் இணை இயக்குநராக பணியாற்றிய மனோகரன் இப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். "ஆறுமுகம்', "வள்ளுவன் வாசுகி', "நெல்லு' உள்ளிட்ட படங்களைத் தொடர்ந்து சத்யா இப்படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார். நாசர் முக்கிய பாத்திரம் ஏற்க, அஞ்சலி மற்றும் "சாமுராய்' அனிதா கதாநாயகிகளாக நடிக்கிறார்கள். "காதலா காதலா' படத்துக்குப் பின் இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதன் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.
படத்தின் கதைக் கரு குறித்து இயக்குநரிடம் பேசிய போது...
""இன்றைய சமுதாயத்தில் இரண்டு தலைமுறைக்கு இடையில் கண்ணுக்கு தெரியாமல் பனிப்போராக நடந்துக் கொண்டிருக்கும் பிரச்னை ஒன்றைத்தான் கதைக் கருவாக எடுத்திருக்கிறேன். இந்த விஷயத்தை இந்த காலக் கட்டத்தில் சொன்னால் நன்றாக இருக்கும் எனத் தோன்றியது. இளைய தலைமுறையையும், முந்தைய தலைமுறையையும் பற்றி பேசுகிற இந்தப் படம் இரண்டு தலைமுறைகளும் ரசிக்கும் படமாக இருக்கும். இசைக்கு முக்கியத்துவம் கொடுத்து பாடல்கள் உருவாகி வருகின்றன. நா.முத்துக்குமார், பா.விஜய், சினேகன், யுகபாரதி, விவேகா என இளைய தலைமுறை கவிஞர்கள் அனைவரும் பாடல்களை எழுதியுள்ளனர். படப்பிடிப்பு முடிந்த நிலையில் இறுதிக் கட்டப் பணிகள் நடந்து வருகின்றன'' என்றார்.
இசை - டி.இமான். ஒளிப்பதிவு - லட்சுமிபதி, கலை - வைரபாலன், நடனம் - தினா. தயாரிப்பு - ஜெ.ரவி.