

கடந்த 4 ஆண்டுகளாக வீட்டு வாடகை கொடுக்காத கன்னட நடிகருக்கு நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
கன்னட நடிகரான யாஷ், தனக்கு நான்கு ஆண்டுகளாக வீட்டு வாடகை தரவில்லை என்று பெங்களூரு - கிரிநகர் காவல் நிலையத்தில் முனிபிரசாத் என்கிறவர் புகார் அளித்தார். அதில் அவர் கூறியதாவது:
நடிகர் யாஷுக்கு 5 படுக்கை அறைகள் கொண்ட எனது வீட்டை வாடகைக்குக் கொடுத்தேன். மாத வாடகையாக ரூ. 40,000 நிர்ணயிக்கப்பட்டது. அக்டோபர் 2010 முதல் யாஷ் மற்றும் அவரது அம்மா புஷ்பாவும் அந்த வீட்டில் வசிக்கிறார்கள். சில மாதங்களுக்குப் பிறகு எனக்கு வாடகை வரவில்லை. வாடகையைக் கேட்டால் மிக மோசமாக நடத்துவார்கள். வீட்டில் நிறைய மாற்றங்களையும் செய்துவிட்டார்கள். இதனால் நடிகர் யாஷ் எனக்கு ரூ. 21.37 லட்சம் வழங்கவேண்டும் என்றார்.
இந்தப் புகார் தொடர்பான விசாரணை கீழமை நீதிமன்றத்தில் நடந்தது. கடந்த 4 ஆண்டுகளாக வாடகை கொடுக்காத கன்னட நடிகர் யாஷுக்கு நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. சனிக்கிழமைக்கு முன்பு நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பாக யாஷின் அம்மா புஷ்பா பேட்டியளித்தபோது, முனிபிரசாத் எங்களிடம் வாடகை கேட்கவேயில்லை. வீட்டைக் காலி செய்ய வற்புறுத்துகிறார். நீதிமன்றம் வழியாக நாங்கள் வாடகையைக் கொடுத்துவிடுகிறோம். ஆனால் அவருடைய அனுமதியுடன் பல லட்சம் செலவில் வீட்டில் நிறைய மாற்றங்களைச் செய்துள்ளோம். அதற்கான தொகையை முனிபிரசாத் எங்களுக்கு வழங்கவேண்டும் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.