துஷாரா விஜயன் என்றதும் நமது நினைவுக்கு வரும் துணிச்சலான பெண் எனும் தோற்றத்தை மறைக்கவே அவர் இத்திரைப்படத்தை ஒப்புக்கொண்டிருக்க வேண்டும். முந்தைய திரைப்படங்களில் வந்த “நேருக்கு நேர்” பாணியிலிருந்து விலகி தனது முதலாளிப் பெண்ணிடம் அடங்கி ஒடுங்கி அழும் காட்சிகளின் மூலம் வென்றிருக்கிறார் துஷாரா விஜயன். உயிர் வாழ்தலுக்குத் தேவையான பணத்திற்காக பணியிடத்தில் அவமானப்படும் இடங்களில் இதயத்தை நொறுங்கச் செய்திருக்கிறார். அர்ஜூன் தாஸிடம் ஆதரவாக தஞ்சம் புகுவதிலிருந்து அவர் மீது கோபம் கொண்டு அடிப்பது வரை துஷாரா தூள் கிளப்பியிருக்கிறார். துணை கதாபாத்திரங்களும் காட்சிக்கு காட்சி கைகொடுத்திருக்கின்றனர். சுரேஷ் வெங்கட், வனிதா, பரணி, ஷா ரா, காளி வெங்கட், அர்ஜூன் சிதம்பரம் என பலரும் திரைப்படத்திற்கு வலுசேர்த்திருக்கின்றனர்.