நடிகர் தனுஷ் தமிழ் சினிமாவில் பாடகர், பாடலாசிரியர், தயாரிப்பாளர், இயக்குநர் எனப் பல துறைகளில் அழுத்தமான தடங்களைப் பதித்தவர். 2016-ல் அவரது இயக்கத்தில் வெளியான பா. பாண்டி திரைப்படம் மக்களிடையேயும், திரை ஆர்வலர்களிடமும் நல்ல வரவேற்பைப் பெற்றது.
அந்த வெற்றிக்குப்பின் கிட்டத்தட்ட ஆறு வருடங்கள் நடிப்பில் மட்டுமே அதிக கவனம் செலுத்திய தனுஷ் இப்போது மீண்டும் இயக்குநர் அவதாரம் எடுத்துள்ளார். தனது 50ஆவது படத்தை அவரே எழுதி, இயக்கி, நடித்துள்ளார்.
கேங்ஸ்டர் கதைக்களத்தில் உருவாகியுள்ள இந்த படத்திற்கு "ராயன்" எனப் பெயர் சூட்டியுள்ளனர். இந்தப் படத்தில் பெயர் அறிவிப்பு போஸ்டர் சமீபத்தில் வெளியாகிய நிலையில், இந்தத் திரைப்படத்தில் நடிக்கும் எஸ்.ஜே.சூரியாவின் தோற்றம் குறித்த போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.
இந்த திரைப்படத்தில் துஷாரா விஜயன், காளிதாஸ் ஜெயராம், சந்தீப் கிஷான் ஆகியோர் முக்கியக் கதாப்பாத்திரத்தில் நடிக்கின்றனர்.