ககன்யான் திட்டத்தில் விண்வெளிக்கு செல்லவுள்ள வீரரை திருமணம் செய்ததாக பிரபல நடிகை அறிவித்துள்ளார்.
இஸ்ரோவின் ககன்யான் திட்டத்தில் விண்வெளிக்கு செல்லும் நான்கு வீரர்களை பிரதமர் நரேந்திர மோடி, கடந்த செவ்வாய்க்கிழமை நாட்டு மக்களுக்கு அறிமுகம் செய்து வைத்தார்.
இந்த நான்கு வீரர்களில் திருவனந்தபுரத்தை சேர்ந்த குரூப் கேப்டன் பிரசாந்த் பாலகிருஷ்ணன் நாயரும் ஒருவர். இவரை கடந்த மாதம் திருமணம் செய்து கொண்டதாக புகைப்படத்தை பதிவிட்டு மலையாள நடிகை லீனா நாயர் தற்போது அறிவித்துள்ளார்.
மலையாளத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள லீனா நாயர், தமிழில் அனேகன், கடாரம் கொண்டான், திரெளபதி உள்ளிட்ட படங்களில் துணை கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.
இந்த நிலையில், திருமண புகைப்படத்தை வெளியிட்டு லீனா நாயர் வெளியிட்ட பதிவில்,
“விண்வெளிக்கு செல்லும் முதல் வீரராக கேரளத்தை சேர்ந்த குரூப் கேப்டன் பிரசாந்த் பாலகிருஷ்ணனை நமது பிரதமர் கெளரவப்படுத்தியது நமது மாநிலத்துக்கு பெருமை. எனக்கு தனிப்பட்ட முறையில் பெருமைகூட.
பிரசாந்த் பாலகிருஷ்ணனை கடந்த மாதம் 17-ஆம் தேதி பாரம்பரிய முறைப்படி திருமணம் செய்து கொண்டேன். ரகசியமாக இருக்க வேண்டும் என்பதால், இதுவரை இந்த தகவலை வெளியிடாமல் இருந்தேன்.” எனத் தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடி அறிமுகம் செய்த நிகழ்வுக்கு வருகை தந்திருந்த லீனா நாயர், தனது கணவருடன் எடுத்துக் கொண்ட புகைப்படம், இஸ்ரோ தலைவர் சோம்நாத்துடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார்.