தங்கை பாசம்! கொண்டாடப்படுவாரா கோழிப்பண்ணை செல்லதுரை? - திரை விமர்சனம்!
இயக்குநர் சீனு ராமசாமி இயக்கத்தில் அறிமுக நாயகன் ஏகன் மற்றும் யோகி பாபு நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் கோழிப்பண்ணை செல்லதுரை. தொடர்ந்து நல்ல படங்களைக் கொடுத்துவந்த சீனு ராமசாமியின் இந்த படம் எப்படி இருக்கிறது?
கணவன் மனைவிக்கு இடையே ஏற்படும் பிரச்னையால் 11 வயது செல்லத்துரையும் அவனது தங்கையும் கைவிடப்படுகிறார்கள். ஆதரவாக இருந்த பாட்டியும் இறந்துவிட, சாப்பாட்டிற்கே கஷ்ட்டப்படும் நிலை ஏற்படுகிறது. தனது பாட்டி ஊரில் சிறுவன் செல்லத்துரை தன் தங்கையை எப்படி வளர்ந்து கரை சேர்க்கிறார்? அந்த ஓட்டத்திற்கு நடுவில் வந்து சேரும் உறவுகள் யார் யார்? விட்டுச் சென்ற பெற்றோர் என்ன ஆனார்கள்? என ஒரு கேரக்டர் டிரவன் கதையாகவே இந்த கதை உருவாக்கப்பட்டுள்ளது.
உதாரணத்திற்கு தர்மதுரை திரைப்படம் எப்படி ஒரு குடும்பத்தை மையமாக வைத்து தர்மாவின் வாழ்க்கை ஓட்டத்தைக் காட்டியதோ, அதேபோல் தங்கையை மையமாக வைத்து செல்லத்துரையின் வாழ்க்கை ஓட்டத்தைக் காட்டுகிறது இந்த திரைப்படம். எனினும் இயக்குநரின் மற்ற திரைப்படங்களில் கிடைக்கும் உணர்வு இந்த படத்தில் கிடைக்கவில்லை.
முதற்பாதி முதல் இரண்டாம் பாதியில் பாதிவரை படம் சோர்வாகவே நகர்கிறது. எதார்த்தமான கதாப்பாத்திரங்களையும், காட்சிகளையும் கொடுத்து நம்மைக் கவர்ந்த சீனு ராமசாமியின் ”டச்” இந்த படத்தில் இல்லை. நாயகன் ஏகன் தன்னால் முடிந்த அளவிலான நடிப்பைக் கொடுத்திருந்தாலும் கதைக்குப் போதுமானதாக இல்லாதது திரையில் தெரிகிறது. ஆனால் சில காட்சிகளில் அவரது மெனக்கெடுதல்களைப் பார்க்கும்போது போகப்போகத் தேறிட வாய்ப்பிருப்பதாகவும் தெரிகிறது.
முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ள யோகி பாபுவின் முக்கால்வாசி நகைச்சுவைக் காட்சிகளில் திரையரங்கு அமைதியாகவே உள்ளது. ஆனால் நகைச்சுவை நடிகர் என்பதைத் தாண்டி யோகி பாபு நல்ல கதாப்பாத்திரத்தை ஏற்று அதில் அழகாக பொருந்தியுமிருக்கிறார்.
தங்கையாக நடித்த சத்யா தேவி கச்சிதமான நடிப்பை வழங்கி கவர்கிறார். நாயகியாக நடித்த பிரிகிடா இயல்பான நடிப்பை வழங்கியுள்ளார். கிராமத்தில் நடக்கும் கதை என்றாலும் ஒளிப்பதிவில் கவருமளவிலான வேலைகள் இடம்பெறவில்லை. இசையும் முதல்பாதியில் தொந்தரவு செய்தாலும், இரண்டாம் பாதியில் உள்ள கடைசி இரண்டு பாடல்கள் ஆறுதல் அளிக்கின்றன.
ஹீரோ கதாப்பாத்திரத்துடன் ஒன்றுவதற்குத் தேவையான காட்சிகள் திரைக்கதையில் இடம்பெறாததால் செல்லத்துரை பார்வையாளர்களை நெருங்கவும் கவரவும் தவறுகிறார். முக்கால்வாசி கதாப்பாத்திரங்கள் எதார்த்த நடிப்பை கொடுக்க தவறியதும், காட்சிகளை இயல்பாக உருவாக்க இயக்குநர் தவறியதும் படத்தின் தொய்வுக்கு முக்கிய காரணம்.
படத்தில் பேசப்பட்டுள்ள சமுதாயப் பிரச்னைகளும், அண்ணன் தங்கை இடையேயான பாசமும் வெறும் வசனங்களில் மட்டுமே இடம்பெற்றிருப்பதால் இந்த கால இளம் பார்வையாளர்களின் ”கிரிஞ்ச்” டேகைப் பெறுகிறது. எனினும் கடைசி 20 நிமிட அளவிலான படம் ஆறுதல் அளிக்கும் வகையில் வேகமாக நகர்ந்து நம்மை கண்ணீர் சிந்த வைக்க முயல்கிறது.
மிகவும் நல்லவனாகக் காட்டப்படும் இந்த கோழிப்பண்ணையில் வேலை செய்யும் செல்லத்துரை நல்ல திரைக்கதையும் காட்சிகளும் இருந்திருந்தால் நல்ல படமாகவும் மாறியிருப்பான்.
=====
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.