ஹைதராபாத்; தமிழ் தெலுங்கு இரு மொழிகளிலும் பட்டையை கிளப்பிய 'பாகுபலி' படத்தின் இரண்டாம் பாகமான 'பாகுபலி-2' வில், நடிகர் ராணாவின் புதிய தோற்றம் பற்றிய புகைப்பபடம் வெளியாகியுள்ளது.
பிரபல இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமவுலி இயக்கத்தில் வெளியான சரித்திர திரைப்படம் பாகுபலி. தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி ஆகிய மூன்று மொழிகளிலும் வெளியான இந்த திரைப்படம் வசூலில் இந்திய அளவில் சாதனை படைத்தது.
அதனைத் தொடர்ந்து அப்படத்தின் இரண்டாம் பாகத்திற்கான படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது. தற்போது அதில் நடித்து வரும் நடிகர் ராணாவின் புதிய உடல் தோற்றம் பற்றிய புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. அது தொடர்பாக செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
இரண்டாம் பாகத்தில் பல்லாள தேவன் என்னும் கதாபாத்திரம் கொஞ்சம் வயதான தோற்றத்தில் வருகிறது. எனவே அதற்காக தசை வலு கூடிய மற்றும் எடை அதிகமான தோற்றத்தில் நடிக்க வேண்டியிருந்தது. எனவே என்னுடைய எடையை 108 முதல் 110 கிலோ வரை இருக்குமாறு பார்த்துக் கொண்டேன்.
ஒரு நாளைக்கு இரண்டரைமணி நேரம் என்ற வீதத்தில் கடந்த ஐந்து மாதங்களாக கடும் உடல் பயிற்சிகள் செய்து வந்தேன். என்னுடைய பயிற்சியாளர் கிரி என்னுடன் கூடவே இருந்து இவற்றை எல்லாம் கண்காணித்து வந்தார்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
ராணாவின் இந்த தோற்றத்திற்கு சூர்யா மற்றும் விக்ரம் பிரபு உள்ளிட்ட கோலிவுட் நட்சத்திரங்களும் தங்கள் பாராட்டுகளை சமூக வலைத்தளமான டிவிட்டரில் தெரிவித்துள்ளனர்.