மாதம்தோறும் ரூ. 2.50 லட்சம் பராமரிப்புத் தொகையாக வழங்குவதற்கு, தனது கணவர் இந்திரனுக்கு உத்தரவிடக் கோரி சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் நடிகை ரம்பா மனு தாக்கல் செய்தார். இதுதவிர, ரம்பாவிடம் உள்ள குழந்தைகளை மீட்டுத்தர இந்திரனும் கோரியிருந்தார். இந்நிலையில் இருவருக்கும் இடையே சமரசம் ஏற்பட்டதையடுத்து இந்த வழக்கு முடித்து வைக்கப்பட்டுள்ளது.
இலங்கையை பூர்வீகமாக கொண்ட கனடாவைச் சேர்ந்த பிரபல தொழிலதிபர் இந்திரன் பத்மநாபனை 2010-ம் ஆண்டு ஏப்ரல் 8-ல் திருப்பதியில் திருமணம் செய்து கொண்டார் நடிகை ரம்பா. கருத்துவேறுபாடு காரணமாக, 2012-ம் ஆண்டு முதல் பிரிந்து வாழ்கின்றனர். இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளன.
இந்த நிலையில், சென்னையில் வசித்துவரும் ரம்பா இந்து திருமணச் சட்டப்படி இணைந்து வாழ கணவருக்கு உத்தரவிடக்கோரி, சென்னை இரண்டாவது கூடுதல் குடும்ப நல நீதிமன்றத்தில் மனுவைத் தாக்கல் செய்தார்.
இந்த நிலையில், மேலும் கூடுதலாக தாக்கல் செய்துள்ள மனுவில் ரம்பா கூறியிருந்ததாவது: திருமணத்துக்குப் பின்னர் திரைப்படங்களில் நடிப்பதில்லை. ஆகையால், எந்த வருமானம் இல்லை. மூத்த குழந்தை லான்யாவுக்கு சென்னையில் உள்ள தனியார் பள்ளியில் ஆண்டுக்கு ரூ. 3.50 லட்சம் கட்டணம் செலுத்துகிறேன். இளைய மகள் சாஷாவின் பராமரிப்பு, மருத்துவ செலவு அதிகமாக உள்ளது. கணவர் கனடாவில் மாதத்துக்கு இந்திய ரூபாய் மதிப்பில் ரூ. 25 லட்சம் வருவாய் ஈட்டுகிறார். ஆகவே, மாதம்தோறும் ரூ.1.50 லட்சமும், இரு குழந்தைகளுக்கு தலா 50 ஆயிரம் என மொத்தம் ரூ.2.50 லட்சம் வழக்கு முடிவடையும் வரை இடைக்கால பாரமரிப்பு செலவுக்கு ( ஜீவனாம்சம்) வழங்க உத்தரவிட வேண்டும் என்று கோரினார். இதுதவிர, ரம்பாவிடம் உள்ள குழந்தைகளை மீட்டுத்தர இந்திரன் கோரியிருந்தார்.
இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பாக ரம்பா, இந்திரன் ஆகிய இருவரும் சமரச மையத்தில் பேசி ஒரு முடிவுக்கு வருமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து இன்று இருவருக்கும் இடையே சமசரப் பேச்சு நடைபெற்றது. இறுதியில் ரம்பாவுடன் சேர்ந்து வாழ இந்திரன் முடிவெடுத்தார். இதையடுத்து ரம்பாவிடம் உள்ள குழந்தைகளை மீட்டுத்தரக் கோரிய இந்திரகுமாரின் வழக்கு முடித்து வைக்கப்பட்டது.