பிக் பாஸ் நிகழ்ச்சியில் நடிகை ஓவியா மீண்டும் கலந்துகொள்வது குறித்து கமல் பதில் அளித்துள்ளார்.
சர்வதேச அளவில் மிகவும் பிரசித்தி பெற்ற நிகழ்ச்சி - பிக் பாஸ். தற்பொழுது இந்நிகழ்ச்சியை விஜய் தொலைக்காட்சியில் நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்குகிறார். சமீபத்தில் இந்த நிகழ்ச்சி ஆரம்பமானது. இந்த நிகழ்ச்சியின் மூலம் நடிகர் கமல்ஹாசன் முதன் முறையாக தொலைக்காட்சியில் அடியெடுத்து வைத்துள்ளார். திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 9 மணிக்கும், சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் 8.30 மணிக்கும் ஒளிபரப்பாகிறது.
சமூகவலைத்தளங்களில் பிக் பாஸ் குறித்த விவாதங்கள் அதிகமாக உள்ளன. இதனால் அந்த நிகழ்ச்சிக்குப் பார்வையாளர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது.
இந்நிலையில் நேற்றைய பிக் பாஸ் நிகழ்ச்சியில் இன்னும் சிலர் இந்தப் போட்டியில் கலந்துகொள்வார்கள் என்று கமல் புதிய தகவல் ஒன்றை அறிவித்தார். அப்போது பார்வையாளர்கள் வரிசையில் இருந்து ஓவியாவுக்கு ஆதரவாகக் குரல் எழுந்தது. ஏற்கெனவே ஓவியா இந்நிகழ்ச்சியில் மீண்டும் திரும்புவது குறித்து செய்திகள் வருவதால் அதையொட்டி ரசிகர்களின் ஆர்வம் வெளிப்பட்டது.
இதற்குப் பார்வையாளர்களிடம் பதில் அளித்த கமல், யாருக்கு வர விருப்பம் உள்ளதோ அவர்கள் வருவார்கள் என்று கூறினார். கமல் சொன்ன தொனியை வைத்துப்பார்க்கும்போது, ஓவியாவுக்கு இந்த நிகழ்ச்சியில் மீண்டும் பங்குபெறுவதில் இஷ்டமில்லை, அதனால் நுழைய விருப்பம் உள்ளவர்களை விஜய் டிவி அழைத்துவரும் என அறியப்படுகிறது.
விஜய் - முருகதாஸ் படம் தொடர்பான பேச்சுவார்த்தை மற்றும் ஏற்கெனவே ஒப்புக்கொண்ட இரு படங்கள் என ஓவியா திரைத்துறையில் மும்முரமாக இருப்பதாலும் ஆரவ் காதல் தொடர்பான பிரச்னைகளாலும் மீண்டும் நிகழ்ச்சியில் பங்கேற்க மறுத்துள்ளதாகத் தெரிகிறது.