
தமிழில் வெளியாகும் பெரும்பாலான படங்களை சில நேரத்திலேயே இணையத்தில் பதிவேற்றம் செய்துவிடும் ‘தமிழ் ராக்கர்ஸ்’ அட்மினிடம் இயக்குநர் அப்பாஸ் அக்பர் கோரிக்கை வைக்கும் விதமாக விடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
கடந்த வெள்ளிக்கிழமை புதுமுக இயக்குநர் அப்பாஸ் அக்பர் இயக்கிய சென்னை 2 சிங்கப்பூர் படம் வெளியானது. ஜிப்ரான் இந்தப் படத்தை தயாரித்து இசையமைத்தும் இருந்தார் ஜிப்ரான். இன்னிலையில் படம் ரிலீசான சில தினங்களிலேயே இதன் பைரஸி காப்பியைத் தமிழ் ராக்கர்ஸ், தமிழ் கன் போன்ற இணையதளங்கள் பதிவேற்றி இருந்தனர்.
இதனால் இவர்களுக்குக் கோரிக்கை வைக்கும் விதமாகப் படத்தின் இயக்குநர் அப்பாஸ் விடியோ பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார், அதில் அவர் கூறியிருந்ததாவது “சென்னை 2 சிங்கப்பூர் கடந்த 6 வருடங்களாகப் பல போராட்டங்களுக்கு மத்தியில் உருவான படம். 6 வருடங்களாக எங்களது வியர்வை, ரத்தம், உழைப்பு ஆகிய அனைத்தையும் போட்டு படத்தை முடித்துள்ளோம். இதற்கு ரூ.8 கோடி வரை செலவாகி உள்ளது இந்த முழு பணத்தையும் எங்களால் ஒரே வாரத்தில் திருப்பி எடுக்க முடியாது, அதற்குக் குறைந்தது 4 வாரங்களாவது தேவை. இப்போதுதான் படம் பற்றிய நல்ல விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கின்றன. மக்கள் கூட்டமும் விரும்பி திரையரங்கிற்கு படத்தைப் பார்க்க வருகின்றனர். அதே போல் திரைகளின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. அப்படி இருக்கும் போது எங்களது வியர்வையையும், வலியையும் உங்களது இணையதளத்தில் பார்ப்பதற்கு கஷ்டமாக இருக்கிறது. நாங்கள் இந்தப் படத்தை உருவாக்கப் பட்ட கஷ்டத்தை உங்களிடம் சொல்லி முடியாது, அப்படிச் சொல்லவும் கூடாது. ஆகையால் எங்களுக்கு ஒரு 30 நாட்கள் அவகாசம் கொடுங்கள். உங்கள் தளத்தில் இருந்து படத்தை ஒரு 30 நாட்களுக்கு நீக்கிவிட்டு, 31-வது நாள் மீண்டும் பதிவேற்றி கொள்ளுங்கள்!” என்று பேசியுள்ளார்.
இவரது இந்தக் கோரிக்கையை ஏற்று ‘சென்னை 2 சிங்கப்பூர்’ படத்தை இணையத்தில் இருந்து தமிழ் ராக்கர்ஸ் நீக்கிவிட்டதாகவும் சிலர் கூறுகிறார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.