

தமிழகத்தின் கலாசார பாரம்பரியத்துடன் இணைந்த விளையாட்டாக விளங்கும் ஜல்லிக்கட்டு, பொங்கல் பண்டிகையை ஒட்டி நடத்தப்படுகிறது. 2 ஆயிரம் ஆண்டுகள் மிகப் பழமையானது இந்த விளையாட்டுப் போட்டி. ஆனால், தமிழகத்தில் ஜல்லிக்கட்டுப் போட்டி நடத்த தடை விதித்து கடந்த 2014-ஆம் ஆண்டு மே 7-ஆம் தேதியன்று உச்ச நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்தது. தமிழகத்திலும், மகாராஷ்டிரத்திலும் ஜல்லிக்கட்டு, எருதுப் போட்டிகள் மூலமாக விலங்குகளை காட்சிப்படுத்துவதை அனுமதிக்க முடியாது என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இதனால் தமிழக மக்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர். இந்தவருடமும் ஜல்லிக்கட்டுப் போட்டி தமிழகத்தில் நடைபெறவேண்டும் என்று குரல்கள் எழுந்துள்ளன.
நேற்று ஒரு விழாவில் பேசிய கமல், ஜல்லிக்கட்டு என்பதைவிட ஏறுதழுவுதல் என்பதுதான் சரியான பெயர். மாடு பிடித்தல் என்று கூட சொல்வார்கள். ஏறுதழுவுதல் என்ற பெயரில் இருக்கும் கருணை, அந்த விளையாட்டு எப்படிப்பட்டது என்பதை விளக்குகிறது. மேற்கத்திய நாடுகளில் நடக்கும் காளைச் சண்டையோடு ஜல்லிக்கட்டை ஒப்பிடக்கூடாது. அது இறைச்சியாகி அனைவரது தட்டிலும் போய்ச் சேரும். நம் நாட்டில் அப்படி அல்ல. இங்குள்ள மாடுகள் மறுபடியும் பரிவுடன் வளர்க்கப்படும், மறுபடியும் விளையாட்டில் கலந்து கொள்ளும் என்றார்.
நடிகர் சூர்யாவும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாகப் பேசியுள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது: 200 வகையான காளைகள் இருந்த நம் நாட்டில், இப்போது 30 வகைகள்கூட இல்லை என்கிறார்கள். அவை அப்படியே அழிந்து கொண்டிருக்கின்றன; அவற்றை எப்படி நாம் பராமரிக்கப் போகிறோம் என்பதுதான் எனது முதல் கேள்வியாக இருக்கிறது. ஜல்லிக்கட்டு என்பது நமது கலாசாரத்தோடு, அடையாளத்தோடு கலந்த ஒரு விஷயம். அதை தடை செய்யக்கூடாது என்பது என் கருத்து என்று கூறியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.