ரஜினி அடுத்து நடிக்கவுள்ள காலா படத்தின் படப்பிடிப்பு மும்பையில் நடைபெற்று வருகிறது. ரஜினி அரசியலுக்கு வருவாரா மாட்டாரா என்ற பரபரப்பான சூழலில் 2.0 படத்தையடுத்து பா.இரஞ்சித் இயக்கத்தில் நடிக்கிறார் ரஜினி. இதன் தலைப்பு - காலா கரிகாலன். நடிகர் தனுஷ் தனது வுண்டர்பார் நிறுவனத்தின் சார்பில் இப்படத்தை தயாரிக்கிறார். இப்படம் தமிழ், இந்தி, தெலுங்கு என 3 மொழிகளில் வெளியாகிறது. இதற்கு முன்பு ரஜினியை வைத்து கபாலி படத்தை இயக்கினார் பா.இரஞ்சித். அப்படத்தின் வெற்றிக்குப் பிறகு மீண்டும் ரஜினியை இயக்கும் வாய்ப்பு அவருக்குக் கிடைத்துள்ளது.
கபாலி படத்தைத் தொடர்ந்து சந்தோஷ் நாராயணன் இப்படத்துக்கு இசையமைக்கிறார். ஹூமா குரேஷி, சமுத்திரக்கனி, நானா படேகர் உள்ளிட்ட சிலர் இப்படத்தில் நடிப்பதற்கு ஒப்பந்தமாகியுள்ளனர். இது ரஜினியின் 164-வது படம்.
இந்நிலையில் முதல்முறையாக இப்படம் குறித்து ட்வீட் வெளியிட்டுள்ளார் ஹுமா. அவர் கூறியதாவது: காலா படத்துக்காகத் தயாராகிக்கொண்டு வருகிறேன். கொஞ்சம் கொஞ்சமாக ஜரீனாவாக மாறிக்கொண்டு வருகிறேன். கடுமையாக உழைக்கிறேன். நான் ஆசிர்வதிக்கப்பட்டவள் என்று கூறியுள்ளார்.