

பாகுபலி 2 படத்தின் வசூல் ரூ. 1500 கோடியைத் தாண்டிவிட்டது. இந்திய சினிமாவின் மகத்தான படம் என உலகெங்கும் இதன் வசூலை முன்வைத்து புகழ்மாலைகள் சூட்டப்படுகின்றன. ஆனால் ஹிந்திப் பட இயக்குநர் ஒருவர் பாகுபலி 2-வின் சாதனைகளை அடியோடு மறுக்கிறார். அதற்கு அவர் ஒரு காரணமும் சொல்கிறார்.
2001-ல் சன்னி தியோல் நடிப்பில் வெளியான ஹிந்திப் படம், Gadar: Ek Prem Katha. இதை இயக்கியவர், அனில் சர்மா. இவர்தான் பாகுபலி 2 படத்தின் சாதனைகளை ஏற்கமறுக்கிறார். ஏனாம்?
பாகுபலி 2 படம் எந்தவொரு சாதனையும் படைக்கவில்லை. 2001-ல் நான் இயக்கிய கத்தார் படம் ரூ. 265 கோடி வசூலித்தது. அதை இன்றைய பண மதிப்புக்குக் கணக்கிட்டால் எப்படியும் ரூ. 5000 கோடி வரும்! நல்ல படங்கள் வெளிவந்தால் சாதனைகள் உடைபடவே செய்யும். ஆனால், பாகுபலி 2 படத்தைப் பொறுத்தவரை அது எந்தவொரு சாதனையும் படைக்கவில்லை. 2001-ல் டிக்கெட் விலை ரூ. 25 என்றிருந்தபோது கத்தார் படம் ரூ. 265 கோடி வசூலித்தது. இன்றைய பணமதிப்பில் அது ரூ. 5000 கோடி. ஆனால் பாகுபலி 2 படமோ இதுவரை ரூ. 1500 கோடிதான் வசூலித்துள்ளது. எனவே அது முந்தைய சாதனைகள் எதனையும் உடைக்கவில்லை என்கிறார் அனில் சர்மா.
பிரபாஸ், ராணா டகுபதி, அனுஷ்கா, தமன்னா, சத்யராஜ், ரம்யா கிருஷ்ணன் போன்றோர் நடிப்பில் தெலுங்கு, தமிழ், மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் உருவாகியுள்ள படம் - 'பாகுபலி தி கன்க்ளூஷன்’ (பாகுபலி 2). ஏப்ரல் 28 அன்று வெளியான பாகுபலி 2, இந்தியாவில் மட்டும் 9,000 திரையரங்குகளில் வெளியானது. இதுவரை ரூ. 1500 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து வெற்றிநடை போட்டுவருகிறது. விரைவில் ரூ. 2000 கோடியைத் தொடும் என்கிற எதிர்பார்ப்பை உண்டாக்கியுள்ளது.
ஆனால் ரூ. 5000 கோடி வசூலிக்கும் வரை இந்தச் சாதனையை அனில் சர்மா ஏற்றுக்கொள்ளமாட்டாரே!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.