சென்னை - குரோம்பேட்டை வெற்றி திரையரங்கத்தில் பாகுபலி 2 படம் முக்கிய சாதனை ஒன்று புரிந்துள்ளது.
இதுவரை அந்தத் திரையரங்கில் அதிக மக்கள் பார்த்த படமாக எந்திரன் இருந்தது. இப்போது அதை பாகுபலி 2 முறியடித்துள்ளதாக அந்தத் திரையரங்கின் இயக்குநர் ராகேஷ் கெளதமன் ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். 4 வாரங்களைக் கடந்து அத்திரையரங்கில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது பாகுபலி 2 படம்.
கடந்த சில வருடங்களாக குரோம்பேட்டை வெற்றி திரையரங்கில் அதிக நாள்கள் ஓடிய, அதிகப் பார்வையாளர்களைக் கொண்ட படங்களின் விவரங்கள் வெளியிடப்பட்டு வருகின்றன. அதன் அடிப்படையில் இந்தத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது. இந்தத் திரையரங்கில் மட்டுமல்லாமல் தமிழ்நாட்டில் உள்ள இதர திரையரங்குகளிலும் பாகுபலி 2 படம் இதுபோன்ற சாதனைகளைப் படைத்திருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பிரபாஸ், ராணா டகுபதி, அனுஷ்கா, தமன்னா, சத்யராஜ், ரம்யா கிருஷ்ணன் போன்றோர் நடிப்பில் தெலுங்கு, தமிழ், மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் உருவாகியுள்ள படம் - 'பாகுபலி தி கன்க்ளூஷன்’ (பாகுபலி 2). ஏப்ரல் 28 அன்று வெளியான பாகுபலி 2, இந்தியாவில் மட்டும் 9,000 திரையரங்குகளில் வெளியானது. இதுவரை ரூ. 1500 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து வெற்றிநடை போட்டுவருகிறது.