வாயை மூடிப் பேசவும், ஓ காதல் கண்மனி என இரு தமிழ்ப் படங்களில் நடித்துள்ள துல்கர் சல்மான், அடுத்த தமிழ்ப் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
அறிமுக இயக்குநர் கார்த்திக் இயக்கும் படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார் துல்கர் சல்மான். நான்கு கதாநாயகிகள் நடிப்பதாகச் சொல்லப்படும் இந்தப் படத்துக்கு இசை - தீன தயாளன்.
சமீபகாலமாக இளம் மலையாள நடிகர்கள் தமிழ்ப் படங்களில் நடிக்க அதிக ஆர்வம் செலுத்துகிறார்கள். ஒரே சமயத்தில் துல்கர், நிவின் பாலி (ரிச்சி), ஃபகத் ஃபாசில் (வேலைக்காரன், தியாகராஜன் குமாரராஜா படம்) ஆகியோர் தமிழ்ப் படங்களில் நடித்துவருகிறார்கள்.
பிரேமம் மலையாளப் படம் மூலமாக தமிழ் ரசிகர்களிடம் அழுத்தமாக அறிமுகம் ஆனவர் நிவின் பாலி. நேரம் படத்திலும் இவர் நடித்துள்ளார். இவர் தமிழில் தற்போது நடித்துவரும் படம் ரிச்சி. கன்னட நடிகை ஷ்ரத்தா ஸ்ரீநாத், நட்ராஜ், பிரகாஷ் ராஜ் போன்றோரும் நடிக்கும் இப்படத்தை மிஸ்கினிடம் உதவியாளராகப் பணிபுரிந்த கெளதம் ராமச்சந்திரன் இயக்கி வருகிறார். தூத்துக்குடியில் வசிக்கும் ரெளடி கதாபாத்திரத்தில் நிவின் பாலி நடிக்கிறார். இதில் அவர் சொந்தக் குரலில் பேசியிருக்கிறார். ரிச்சி படத்தின் டீசர் சமீபத்தில் வெளியிடப்பட்டு அதிக வரவேற்பைப் பெற்றது.
ஃபகத் ஃபாசில் தமிழில் வேலைக்காரன், அநீதிக் கதைகள் (தியாகராஜன் குமாரராஜா இயக்கும் படம்) என இரு பெரிய படங்களில் நடித்துவருகிறார். சிவகார்த்திகேயன், நயன்தாரா, ஃபகத் ஃபாசில் நடிப்பில் மோகன் ராஜா இயக்கி வரும் படம் - வேலைக்காரன். 24ஏம் ஸ்டூடியோஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது. இந்தப் படம் செப்டம்பர் 29 அன்று வெளிவருகிறது.
இவர்களுடைய படங்கள் வெற்றி பெறுகிற சமயத்தில் நடிகைகளுக்குப் போட்டியாக இன்னும் அதிகமான நடிகர்களை கேரளாவிலிருந்து எதிர்பார்க்கலாம்.