

ஜோதிகா நடித்துள்ள மகளிர் மட்டும் படம் பார்க்கச் செல்லும் பெண்களுக்கு அதிர்ஷ்டம் இருந்தால், ஒரு பட்டுப்புடவை பரிசாகக் கிடைக்க வாய்ப்புண்டு!
பிரம்மா இயக்கத்தில் ஜோதிகா நடித்துள்ள படம் - மகளிர் மட்டும். ஜிப்ரான் இசையமைத்துள்ள இப்படத்தை நடிகர் சூர்யா தன்னுடைய 2டி நிறுவனம் மூலமாகத் தயாரித்துள்ளார்.
திருமணத்துக்குப் பின் சினிமாவுக்கு திரும்பியுள்ள ஜோதிகா, முழுக்க முழுக்க தன்னைப் பிரதானப்படுத்தும் கதாபாத்திரங்களைத் தேர்வு செய்து நடிக்கிறார். அந்தப் பாணியில் மகளிர் மட்டும், பாலா இயக்கியுள்ள நாச்சியார் போன்ற படங்களில் நடித்துள்ளார்.
மகளிர் மட்டும் படம், செப்டம்பர் 15 அன்று வெளிவரவுள்ளது. இந்நிலையில் முதல் 3 நாள்களுக்குப் படம் பார்க்க வரும் பெண்களுக்கென ஒரு பரிசுத் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய மூன்று நாள்களிலும் படம் பார்க்க வரும் பெண்களிலிருந்து ஒருவர் தேர்ந்தெடுக்கப்பட்டு அவருக்குப் பட்டுபுடைவை பரிசாக அளிக்கப்படவுள்ளது. ஒவ்வொரு திரையரங்கின் ஒவ்வொரு காட்சிக்கும் ஒரு பட்டுப்புடைவை பரிசாக வழங்கப்படுகிறது. எனவே, படம் பார்க்க வரும் பெண்களுக்கு அதிர்ஷ்டம் இருந்தால் அவர்கள் புதுப் பட்டுப் புடைவையுடன் வீட்டுக்குச் செல்லலாம்.
அப்போ ஆண்களுக்கு? துப்பறிவாளன் படம் பார்க்க வருபவர்களுக்கு ஒரு தொப்பியோ கண்ணாடியோ (மிஷ்கின் படம்!) இலவசம் என்று இதுவரை அறிவிப்பு எதுவும் வரவில்லை!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.