விரைவில் தேர்வாகவுள்ள ஆஸ்கருக்கான இந்தியப் படம்!

விரைவில் தேர்வாகவுள்ள ஆஸ்கருக்கான இந்தியப் படம்!

1957 முதல் சிறந்த வெளிநாட்டு திரைப்படத்துக்கான விருதுக்காக இந்தியப் படங்கள் அனுப்பப்படுகின்றன... 
Published on

ஆண்டுதோறும் சர்வதேச அளவில் சிறந்த திரைப்படங்களுக்கு, திரையுலகின் மிக உயரிய விருதான ஆஸ்கர் விருது வழங்கப்பட்டு வருகிறது. சிறந்த வெளிநாட்டுத் திரைப்படத்துக்கான இந்தியப் படமாக எந்தப் படம் தேர்வாகும் என்கிற எதிர்பார்ப்பு சினிமா ரசிகர்களிடையே எழுந்துள்ளது. கடந்த வருடம் வெற்றிமாறன் இயக்கிய விசாரணை படம் தேர்வானது. 

1957 முதல் சிறந்த வெளிநாட்டு திரைப்படத்துக்கான விருதுக்காக இந்தியப் படங்கள் அனுப்பப்படுகின்றன. ஆனால், இதுவரை ஆஸ்கார் விருதுக்காக ’மதர் இந்தியா’, ’சலாம் பாம்பே’, ’லகான்’  ஆகிய 3 இந்தியப் படங்கள் மட்டுமே ஆஸ்கார் விருதுக்காக பரிந்துரைக்கப்பட்டு இறுதிக்கட்டம் வரை (டாப் 5) சென்றுள்ளன. இதுவரை ஓர் இந்தியப் படம் கூட ஆஸ்கர் விருதை வென்றது கிடையாது. 

இந்த வருடப் போட்டிக்கு அனுப்பப்படும் படங்கள், அக்டோபர் 1,2016 முதல் செப்டெம்பர் 30, 2017 வரைக்குள் வெளியாகியிருக்கவேண்டும். செப்டம்பர் 10-க்குள் போட்டியில் பங்குபெறக்கூடிய படங்களை அனுப்பவேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. அக்டோபர் 1-ம் தேதி தேர்வான படம் ஆஸ்கருக்கு அனுப்பப்படும். 

படங்களின் திரையிடல் 16-ம் தேதி தொடங்கியது. இது 23-ம் தேதி வரை நடைபெறும் எனத் தெரிகிறது. அதன்பிறகு தேர்வான படம் அறிவிக்கப்படும். கடந்த வருடம் 29 படங்கள் போட்டியிட்டன. அதிலிருந்து விசாரணை தேர்வானது. இந்த வருடம் பிங்க் உள்ளிட்ட பல படங்கள் கடுமையான போட்டியை உருவாக்கும் எனத் தெரிகிறது.

தயாரிப்பாளரும் இயக்குநருமான சி.வி. ரெட்டி தலைமையிலான நடுவர் குழு, ஆஸ்கர் விருதுக்காக சிறந்த வெளிநாட்டு திரைப்படத்துக்கான இந்தியப் படத்தைத் தேர்ந்தெடுக்கப்படவுள்ளது. தெலுங்கு, தமிழ், கன்னடம் ஆகிய மொழிகளில் படங்களைத் தயாரித்துள்ளார். 

2018 மார்ச் 4 அன்று ஆஸ்கர் விருது வழங்கும் விழா நடைபெறவுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Dinamani
www.dinamani.com