
ஒரு படம் வெற்றி பெறுமா அல்லது தோல்வி அடையுமா என்பது அந்தப் படக்குழுவினருக்கு படம் வெளியாகும் வரை ஏற்படும் டென்ஷன் ஜுரம். அதிக சிரமத்துக்குள்ளாகி எடுத்து முடித்த படம் திரை அரங்கு கிடைக்காமலோ அல்லது விநியோகிஸ்தர்கள் கிடைக்காமல் பெட்டியில் முடங்கிப் போவது சோகம். நடிகர்களின் எதிர்காலம் அந்த படப்பெட்டியில் தான் அடங்கியிருக்கிறது. சினிமா ஒரு கனவு உலகம் மட்டுமல்ல ஒரு மாபெரும் சூதாட்டம். வெற்றி பெற்றவர்களுக்கு மட்டுமே மாலை மரியாதை, தோல்வியடைந்தவர்கள் காணாமல் போவதுமுண்டு, அடுத்தடுத்த முயற்சிகளில் இறங்குவதும் உண்டு. இது ஒரு தொடர் ஓட்டம். மாயமான் வேட்டை.
இந்நிலையில் இந்த வாரம் பிப்ரவரி 16-ம் தேதி 'நாச்சியார், நாகேஷ் திரையரங்கம், மேல்நாட்டு மருமகன், வீரா, மனுசனா நீ' ஆகிய படங்கள் வெளியாக உள்ளன. இவற்றுள் நாச்சியார் ரசிகர்களின் எதிர்பார்ப்பில் உள்ள படம். பொதுவாக ஒரு படத்தை முடிக்க ஒரு வருடத்துக்கு மேல் எடுத்துக் கொள்ளும் இயக்குநர் பாலா நாச்சியாரை விரைவில் முடித்துவிட்டார். படம் வித்யாசமான களனில் அமைந்துள்ளது என்று கோலிவுட் வட்டாரத்தில் பாராட்டி வருகின்றனர்.
வீரா உள்ளிட்ட பிற படங்கள் முன்பே வெளி வந்திருக்க வேண்டியவை. திரையரங்கம் கிடைக்காத நிலை உள்ளிட்ட தவிர்க்க முடியாத தாமதங்களால் தற்போது வெளிவருகின்றன. தேர்வு காரணமாக மார்ச் மாதத்தில் பெரிய படங்கள் எதுவும் வெளிவராது.
பிப்ரவரி மாதத்தில் இதுவரை 20 படங்கள் வெளிவந்திருந்தாலும் சொல்லிக் கொள்ளும்படி எதுவும் வெற்றியடையவில்லை. ரசிகர்களின் எதிர்ப்பார்ப்பில் முதலிடத்தில் இருப்பது காலா. காலா வெளியாகும்வரை ரசிகர்கள் காத்திருக்க வேண்டியதுதான்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.