ஸ்ரீதேவி உடலுக்கு இரண்டாவது பிரேதப் பரிசோதனை அவசியமில்லை!
பிரதேப் பரிசோதனை அறிக்கை வழங்குவதில் தாமதம் ஏற்படுவதால் அடுத்தக்கட்ட நடைமுறைகள் அனைத்தும்...


ஸ்ரீதேவி உடலுக்கு இரண்டாம் பிரேதப் பரிசோதனை அவசியமில்லை என்று தடயவியல் துறை முடிவு செய்துள்ளதாக துபை ஊடகங்கள் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தியத் திரையுலகில் கோடிக்கணக்கான ரசிகர்களின் உள்ளங்களைக் கொள்ளை கொண்ட நடிகை ஸ்ரீதேவி (54) , மாரடைப்பால் சனிக்கிழமை நள்ளிரவு துபையில் காலமானார்.
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி உள்ளிட்ட பல மொழிகளில் 300-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார் ஸ்ரீதேவி. 4 வயதில் குழந்தை நட்சத்திரமாக நடிக்கத் தொடங்கிய ஸ்ரீதேவி 50 ஆண்டுகளைக் கடந்து இந்திய சினிமாவில் கோலோச்சினார்.
இந்தியத் திரையுலகில் தனி இடத்தைத் தக்க வைத்திருந்த ஸ்ரீதேவியின் மறைவு சினிமா ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஸ்ரீதேவிக்கு கணவர் போனி கபூர், மகள்கள் ஜான்வி, குஷி ஆகியோர் உள்ளனர்.
நடிகை ஸ்ரீதேவி, அவரது கணவர் போனி கபூர் மற்றும் மகள் குஷி ஆகியோர், துபையில் நடந்த உறவினர் மோஹித் மார்வா இல்லத் திருமண விழாவுக்குச் சென்றிருந்தனர். அந்தத் திருமண நிகழ்வில் ஸ்ரீதேவி பச்சை நிற உடையில் ஜொலித்தார். இதுவே ஸ்ரீதேவி கலந்து கொண்ட கடைசி நிகழ்ச்சியாக மாறிவிட்டது. திருமண நிகழ்ச்சி முடிந்து, ஹோட்டல் அறைக்குச் சென்ற ஸ்ரீதேவிக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. துபை நேரப்படி இரவு 11.30 மணியளவில் நடிகை ஸ்ரீதேவியின் உயிர் பிரிந்ததாக அவரின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
இதுவரை ஸ்ரீதேவின் உடல் ஒப்படைக்கப்படவில்லை. அதற்கான காரணங்கள்: துபையில் ஸ்ரீதேவி மரணத்துக்கான தடயவியல் அறிக்கை ஒப்படைக்கப்பட்டதும் உடல் எம்பாமிங் செய்ய முஹாய்ஸ்னாவுக்கு (Muhaisna) எடுத்துச் செல்லப்படும். பிறகு காவல்துறையினர் இறப்புச் சான்றிதழ் அளிக்கவேண்டும். இந்தச் சான்றிதழ் அளிக்கப்பட பிறகு துபையின் குடியேற்றத் துறை உடலை அனுப்புவதற்கான நடைமுறைகளை மேற்கொள்ளும். இறப்புச் சான்றிதழ் கிடைத்தபிறகு, ஸ்ரீதேவின் பாஸ்போர்ட்டை இந்தியத் தூதரகம் ரத்து செய்ய வேண்டும். உடலை ஒப்படைக்க அரசு வழக்கறிஞர் அனுமதியளிக்க வேண்டும். பிறகு அவரது உடல் தனி விமானம் மூலம் கொண்டுவரப்படும்.
மும்பையில் ஸ்ரீதேவின் இறுதிச்சடங்குகளுக்கான முன்னேற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. ஸ்ரீதேவியின் உடல் மதியம் 4 மணிக்குள் ஒப்படைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மும்பை சாண்டாகுரூஸ் பகுதியில் இறுதிச்சடங்குகளுக்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில் ஸ்ரீதேவி உடலுக்கு இரண்டாம் பிரேதப் பரிசோதனை அவசியமில்லை என்று தடயவியல் துறை முடிவு செய்துள்ளதாக துபை ஊடகங்கள் தகவல்கள் தெரிவிக்கின்றன. எல்லோருக்கும் பின்பற்றப்படும் நடைமுறையே ஸ்ரீதேவிக்கும் பின்பற்றப்படுவதால் ஸ்ரீதேவி உடலை ஒப்படைப்பதில் தாமதம் ஏற்படுவதாகவும் கூறப்படுகிறது. பிரதேப் பரிசோதனை அறிக்கை வழங்குவதில் தாமதம் ஏற்படுவதால் அடுத்தக்கட்ட நடைமுறைகள் அனைத்தும் தாமதமாகியுள்ளன. இதனால் இறுதிச்சடங்கு இன்று நடைபெறுமா அல்லது நாளை காலை நடைபெறுமா என்கிற கேள்வியும் எழுந்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...