விஜய்க்கு பாதுகாப்பு இல்லை; மத்திய அமைச்சர் அமித் ஷாவிடம் தவெக புகார்! 4 தொகுதிகளிலும் உதயசூரியன் சின்னத்தில் மதிமுக போட்டி! புதுவை விஜய் பிரசாரத்துக்கு 19 இடங்களில் அனுமதி மறுப்பு! அமெரிக்க, இஸ்ரேல் இலக்குகளை குறிவைத்து ஈரான் கடும் தாக்குதல்உள்ளூர் வேட்பாளர் வேண்டுமா? இறக்குமதி செய்த வேட்பாளர் வேண்டுமா? வேலுமணி பிரசாரம்தேர்தல் நேரம்! வாக்காளர் அட்டை அப்டேட் என்ற பெயரில் எஸ்எம்எஸ் வந்தால்?!ஏப். 3 முதல் தென் மாவட்டங்களில் மு.க. ஸ்டாலின் பிரசாரம்! உள்நாட்டு உற்பத்தி இயற்கை எரிவாயு விலையை உயா்த்தி மத்திய அரசு நடவடிக்கை
/

அரசு மரியாதையுடன் நடிகை ஸ்ரீதேவியின் உடல் தகனம் செய்யப்படவுள்ளது!

விலே பார்லே பகுதியில் உள்ள சேவா சமாஜ் மயானத்தில் மாலை 3.30 மணி அளவில் உடல் தகனம் செய்யப்படும்...

News image
Updated On :28 பிப்ரவரி 2018, 8:45 am

எழில்

அரசு மரியாதையுடன் நடிகை ஸ்ரீதேவியின் உடல் தகனம் செய்யப்படவுள்ளது.

துபையில் உறவினர் இல்லத் திருமண விழாவில் பங்கேற்பதற்காக கணவர் போனி கபூர் மற்றும் குடும்பத்தினருடன் சென்ற ஸ்ரீதேவி நட்சத்திர ஹோட்டலில் தங்கினார். அங்கு அவருக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டு இறந்ததாக முதலில் தகவல் தெரிவிக்கப்பட்டது. பின்னர் அவர் மயங்கிய நிலையில் குளியல் அறைத் தொட்டியில் மூழ்கி இறந்ததாக அறிவிக்கப்பட்டது. 

சட்ட நடைமுறைகளைத் தொடர்ந்து, துபை சவக் கிடங்கில் வைக்கப்பட்டிருந்த ஸ்ரீதேவியின் உடலை அவரது கணவர் போனி கபூர் மற்றும் மகன் அர்ஜுன் கபூர் ஆகியோரிடம் துபை அரசு அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை பிற்பகலில் ஒப்படைத்தனர். அதன் பின் ஸ்ரீதேவியின் உடல், 'எம்பாமிங்' எனப்படும் பதப்படுத்துதல் நடவடிக்கைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.

'எம்பாமிங்' முடிந்ததும் துபை விமான நிலையத்துக்கு உடல் கொண்டு வரப்பட்டது. அங்கு, மும்பையில் இருந்து அனுப்பி வைக்கப்பட்டிருந்த தனி விமானத்தில் ஸ்ரீதேவியின் உடல் ஏற்றப்பட்டு மும்பைக்கு இரவு 10 மணியளவில் வந்து சேர்ந்தது.

ஸ்ரீதேவியின் உடல் மும்பையில் உள்ள அவரது இல்லத்துக்கு அருகில் உள்ள லோகண்ட்வாலா பகுதியில் உள்ள செலிப்ரேஷன் ஸ்போர்ட்ஸ் கிளப் வளாகத்தில் பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக இன்று காலை 9.30 முதல் வைக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீதேவியின் உடலுக்குப் பிரபலங்களும் ரசிகர்களும் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள். ஐஸ்வர்யா ராய், சுஷ்மிதா சென், சோனம் கபூர், ஹேமா மாலினி உள்ளிட்ட திரையுலகைச் சேர்ந்தவர்கள் நேரில் வந்து அஞ்சலி செலுத்தியுள்ளார்கள். ரசிகர்களும் வரிசையில் நின்று ஸ்ரீதேவிக்கு இறுதி மரியாதை செலுத்தி வருகிறார்கள்.

பொதுமக்கள் மற்றும் நலம் விரும்பிகளின் அஞ்சலிக்குப் பின், ஸ்ரீதேவியின் உடல் செலிப்ரேஷன் ஸ்போர்ட்ஸ் கிளப்பில் இருந்து பிற்பகல் 2 மணிக்கு ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு, விலே பார்லே பகுதியில் உள்ள சேவா சமாஜ் மயானத்தை அடையும். அங்கு மாலை 3.30 மணி அளவில் உடல் தகனம் செய்யப்படும்.

மஹாராஷ்டிர அரசு மரியாதையுடன் ஸ்ரீதேவியின் உடல் தகனம் செய்யப்படவுள்ளது. ஸ்ரீதேவி உடலின் மீது மூவர்ணக் கொடி போர்த்தப்பட்டு 21 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்படவுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.