போராட வேண்டாம் என்று சொல்வது பைத்தியக்காரத்தனம்: இயக்குநர் எஸ்.ஏ. சந்திரசேகர் ஆவேசம்!

காந்தி போராடவில்லை என்றால் சுதந்தரம் கிடைத்து இருக்குமா? மெரினா போராட்டம்தானே நம் கலாச்சாரத்தை மீட்டு...
போராட வேண்டாம் என்று சொல்வது பைத்தியக்காரத்தனம்: இயக்குநர் எஸ்.ஏ. சந்திரசேகர் ஆவேசம்!

சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி வாழ்க்கையை மையமாகக் கொண்டு திரைப்படம் உருவாகியுள்ளது. விக்கி இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படத்தின் பெயர் - டிராபிக் ராமசாமி. இதில் டிராபிக் ராமசாமி வேடத்தில் எஸ்.ஏ. சந்திரசேகர் நடித்துள்ளார். ரோகிணி, பிரகாஷ் ராஜ், ஆர்.கே. சுரேஷ், இமான் அண்ணாச்சி, அம்பிகா போன்றோரும் நடித்துள்ளார்கள். இசை - பாலமுரளி பாலு.

இப்படத்தின் பாடல்கள் நேற்று வெளியிடப்பட்டன. இசை வெளியீட்டு விழாவில் இயக்குநர் ஷங்கர், கவிஞர் வைரமுத்து உள்ளிட்ட பலர் கலந்துகொண்டார்கள். விழாவை முன்னிட்டு  அரங்க மேடையில் நீதிமன்ற செட் போடப்பட்டு இருந்தது. விழாவில் பேசியவர்கள் சாட்சிக் கூண்டில் நின்றுகொண்டு தான் பேசினார்கள்.

இந்த விழாவில் இயக்குநரும் பட நாயகனுமான எஸ்.ஏ.சந்திரசேகர் பேசியதாவது:

40 நாள்களுக்கு முன்பு இவ்விழாவில் கலந்துகொள்ளவேண்டும் என்று கவிப்பேரரசு வைரமுத்துவிடம் கேட்டபோது விழா எப்போது? என்றவர், எங்கிருந்தாலும் வருவேன் என்றார். அவருக்கு நன்றி. காதல், கோபம், வீரம், சமூகச் சிந்தனை, மண் வாசனை என எதையும் வித்தியாசமான முறையில் எழுதுபவர் அவர். 

உலகமே வியக்கும் ஷங்கருக்கு, மெசேஜ்தான் அனுப்பினேன். உறுதியாக வருவேன் என்றார். அவருக்கு நன்றி. அவர் என்னிடம் புத்திசாலித்தனமாக இருந்தவர். அதனால் தான் என்னுடன் 17 படங்களில் பணியாற்ற முடிந்தது. 

இயக்குநர் விக்கி என்னுடன் 6 ஆண்டுகள் இருந்தார். அவர் முதலில் சொன்ன கதைகள் எல்லாம் பிடிக்கவில்லை என்றுதான் சொல்லிவந்தேன். ஒருநாள் டிராஃபிக் ராமசாமியின் வாழ்க்கைக் கதையைப்  படிக்கக் கொடுத்தார். இரவே படித்துவிட்டேன். மறுநாளே படமாக எடுக்கலாம் என்றேன். முடிவு செய்ததும் ஐந்தாறு முறை டிராபிக் ராமசாமியைப் போய்ப் பார்த்தேன். அவரது நடை, உடை, பாவனைகளை உற்று நோக்கினேன். எனக்குள் பொருத்திக்கொண்டேன்.

இது வாழ்க்கை முழுக்க போராடி வரும் ஒருவரின் கதை. போராட வயது தேவையில்லை. போராடாமல் எதுவும் கிடைக்காது. தாயிடம் பால் குடிக்கவேண்டும் என்றால்கூட குழந்தை அழுதால்தான் கிடைக்கும். போராட வேண்டாம் என்றால் எப்படி? காந்தி போராடவில்லை என்றால் சுதந்தரம் கிடைத்து இருக்குமா? மெரினா போராட்டம்தானே நம் கலாச்சாரத்தை மீட்டுக் கொடுத்தது? தூத்துக்குடி போராட்டம்தானே ஓர் ஆலையை மூட வைத்தது? போராட வேண்டாம் என்று சொல்வது பைத்தியக்காரத்தனம். டிராபிக் ராமசாமியிடம் நானும் நிறைய கற்றுக் கொண்டேன். இப்படம் ஒரு யதார்த்தமான பதிவாக இருக்கும் என்று பேசினார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com