
ஆஸ்திரேலியாவில் உள்ள குயின்ஸ்லாந்தில் ஆளில்லா விமானம் தொடர்பான Medical Express-2018 UAV Challenge போட்டியின் இறுதிச்சுற்று செப்டம்பர் மாதம் நடைபெறுகிறது. அரசும் தனியார் நிறுவனங்களும் ஆராய்ச்சி அமைப்புகளுடன் இணைந்து ஒவ்வொரு வருடம் இந்தப் போட்டிகளை நடத்துகின்றன. இதில் நூற்றுக்கும் அதிகமான நாடுகளிலிருந்து மாணவர்கள் பங்கேற்கிறார்கள். இவர்களில் 55 சதவீதம் பேர் இரண்டாம் சுற்றுக்கு முன்னேறுவார்கள்.
அண்ணா பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள மெட்ராஸ் இன்ஸ்டியூட் ஆஃப் டெக்னாலஜி மாணவர்கள் இந்தப் போட்டியில் பங்கேற்கவுள்ளார்கள். இதற்காக ஆளில்லா விமானத்தை இந்த மாணவர்கள் உருவாக்கவுள்ளார்கள். யாருமில்லாப் பகுதியில் 30 கி.மீ தள்ளி உள்ள இடத்தில் மாட்டிக்கொண்டுள்ள ஒருவரிடமிருந்து ரத்த மாதிரியை எடுத்துச் சோதனைக் கூடத்துக்குக் கொண்டுவந்து மீண்டும் அதே இடத்துக்கு ஆளில்லா விமானம் மூலம் செல்லவேண்டும். இந்தச் சவாலை மாணவர்கள் இந்தப் போட்டியில் எதிர்கொண்டுள்ளார்கள்.
இந்நிலையில் இவர்கள் அமைக்கும் ஆளில்லா விமானங்களுக்கு ஆலோசகராகவும் சோதனை பைலட்டாகவும் நடிகர் அஜித் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்காக ஒருமுறை வந்து பயிற்சியளிக்க அஜித்துக்கு ஆயிரம் ரூபாய் தரப்படுகிறது. அந்தப் பணத்தை கல்லூரியின் ஏழை மாணவர்களுக்கு வழங்க அஜித் கூறியுள்ளார்.
ஆளில்லா விமானங்களை இயக்குவதிலும் அதன் வடிவமைப்புகளிலும் பயிற்சி உள்ளதால் ஆஸ்திரேலியப் போட்டிகளில் பங்கேற்கும் டீம் தக்ஷா குழுவினருடன் இணைந்து பணியாற்ற தன் விருப்பத்தைத் தெரிவித்துள்ளார் அஜித். அதன்படி அந்தக் குழுவுடன் தற்போது இணைந்துள்ளார் அஜித்.
இக்கல்லூரியின் வான்வெளி ஆராய்ச்சி மையத்தின் இயக்குநர் (பொறுப்பு) கே. செந்தில் குமார் கூறியதாவது: இந்தத் துறையில் அஜித்துக்கு உள்ள நிபுணத்துவத்தைக் கணக்கில் கொண்டு இந்த வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.