தமிழில் இயக்குநர் பாலாவின் பரதேசி படத்தில் சிறிய நேர்மறை கதாபாத்திரத்திலும், ஹிந்தியில், நடிகர் ஷாருக்கான் நடிப்பில் வெளிவந்த சென்னை எக்ஸ்பிரஸ் படத்தில் நடிகை தீபிகா படுகோனின் சகோதரியாகவும் திரையுலகக்கு அறிமுகமானவர் புவிஷா.
தமிழகத்தை பூர்வீகமாகக் கொண்ட இவர், தெலுங்கு, கன்னட மொழிப் படங்களிலும் நடித்து வருகிறார். தற்போது, தமிழ் படம் ஒன்றில் கதையின் நாயகியாக நடித்திருக்கும் அவரிடம் உரையாடியதிலிருந்து…
நான் பிறந்து வளர்ந்தது மலேசியாவில். கடந்த 7 ஆண்டுகளாக சென்னையில் வசித்து வருகிறேன். பரதநாட்டிய ஆசிரியையாக இருந்து வந்தேன். அப்போது, திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அப்போது மலேசியாவில் இருந்தேன். அந்தப் படமும் மலேசியாவில் படமாக்கப்பட்டதால் அதில் நடித்தேன்.
நடிப்பு சாதாரண விஷயம் கிடையாது என்பதால், மிக நீண்ட யோசனைக்கு பிறகு நடிகையாகலாம் என்று முடிவு செய்தேன். அதன் பிறகு, சென்னையில் நிரந்தரமாக குடிபெயர்ந்துவிட்டேன். பாலா சாரின் பரதேசி படத்தில் ஒரு துணை கதாபாத்திரமாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அதுவே எனக்கு முதலில் ரிலீசான படமாக அமைந்தது.
தற்போது, தெலுங்கில் ஒரு படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறேன் என்று கூறிய புவிஷா, தமிழ் படங்களில் தமிழ் தெரிந்த நடிகைகளுக்கு வாய்ப்புகள் அதிகம் கிடைப்பது இல்லை என்று வருத்தம் தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில், 'பிற மொழி படங்களில் நடிப்பதில் மொழி பிரச்னை எதுவும் எனக்கு ஏற்படவில்லை. கதையின் நாயகியாக மட்டுமே நடிக்க வேண்டும் என்று நான் நினைக்கவில்லை. படையப்பா ரம்யா கிருஷ்ணன் போல் எதிர்மறை கதாபாத்திரத்திலும், வேறு எந்த வகையான முக்கியமான கதாபாத்திரங்களிலும் நடிக்க தயாராக இருக்கிறேன்' என்றார் புவிஷா.