ராடன் நிறுவனம் சார்பாக தொலைக்காட்சித் தொடர்களில் நடித்து வரும் நடிகை ராதிகா சரத்குமாரின் புதிய நெடுந்தொடர் விரைவில் ஆரம்பமாகவுள்ளது.
சந்திரகுமார் என்கிற சரித்திரப் பின்னணி கொண்ட நெடுந்தொடரை விரைவில் ஆரம்பிக்கவுள்ளார் ராதிகா. இதன் விளம்பரம் தற்போது வெளியாகியுள்ளது.
5 ஆண்டுகளாக ஒளிபரப்பாகி வரும் வாணி ராணி தொடர் விரைவில் முடிவடையவுள்ளது. இதற்கு அடுத்ததாக சந்திரகுமாரி தொடர் தொடங்கவுள்ளது. சரித்திரக் கதையின் பின்னணியுடன் உருவாகி வரும் தொடர் என்பதால் மிகுந்த எதிர்பார்ப்பை உருவாகியுள்ளது. நிகழ்காலக் காட்சிகளை சி.ஜே. பாஸ்கரும் சரித்திரக் காலக் காட்சிகளை பிரபல இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணாவும் இயக்கி வருகிறார்கள்.
இந்த நாடகத்தில் 7 வேடத்தில் ராதிகா நடிக்கவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. நிகழ்காலக் கதையில் 3 வேடங்களிலும் சரித்திரக் கதையில் 4 வேடங்களிலும் நடிக்கவுள்ளார் என்றும் கூறப்படுகிறது. தாமிரபரணி படத்தில் கதாநாயகியாக நடித்த பானு, ராதிகாவின் மகளாக நடிக்கிறார். நிரோஷா, உமா ரியாஸ் கான் போன்றோரும் நடிக்கிறார்கள். இசை - சிற்பி. இந்தத் தொடர் தெலுங்கு, மலையாளத்திலும் ஒளிபரப்பாகவுள்ளது.