பிஎம் நரேந்திர மோடி படத்தை வெளியிட இடைக்காலத் தடை: தேர்தல் ஆணையம்

மக்களவைத் தேர்தல் நேரத்தில் யாருடைய வாழ்க்கை வரலாற்றுப் படமும் வெளியிடப்பட அனுமதி அளிக்கப்படமாட்டாது...
பிஎம் நரேந்திர மோடி படத்தை வெளியிட இடைக்காலத் தடை: தேர்தல் ஆணையம்
Published on
Updated on
1 min read

பிரதமர் மோடியின் வாழ்க்கை தற்போது திரைப்படமாக உருவாகியுள்ளது. சந்தீப் எஸ் சிங் தயாரிப்பில் ஒமங் குமார் இயக்கத்தில் மோடி வேடத்தில் விவேக் ஓப்ராய் நடித்துள்ள இந்தப் படத்துக்கு பிஎம் நரேந்திர மோடி என்று பெயரிடப்பட்டுள்ளது. 

மக்களவை பொதுத் தேர்தல் நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக நடைபெறும் என இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதன்படி, தமிழகத்தில் ஏப்ரல் 18- ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. இந்தியா முழுக்க ஏப்ரல் 11 முதல் மே 19 வரை ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்நிலையில் பிஎம் நரேந்திர மோடி படம், தேர்தல் சமயத்தில் வெளிவருவதால் இந்தப் படம் அதிகக் கவனம் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தி, தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் படம் வெளியாகவுள்ளது. இத்திரைப்படத்தை கடந்த வெள்ளிக்கிழமை வெளியிடுவதற்கு அதன் தயாரிப்பாளர் திட்டமிட்டிருந்தார். ஆனால், சில காரணங்களுக்காக திரைப்பட வெளியீட்டை ஒத்திவைப்பதாகக் கூறினார்.

இந்நிலையில் இத்திரைப்படத்துக்கு இடைக்காலத் தடை விதிக்கக் கோரி, உச்சநீதிமன்றத்தில் காங்கிரஸ் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. அந்த மனுவில், "பார்வையாளர்களையும், வாக்காளர்களையும் கவரும் விதமாக இத்திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. எனவே, மக்களவைத் தேர்தல் முடிவுடையும் வரை இத்திரைப்படத்தின் வெளியீட்டுக்குத் தடை விதிக்க வேண்டும்' என்று கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

முன்னதாக, இந்த மனு மீதான விசாரணை திங்கள்கிழமை நடைபெற்றது. அப்போது, தணிக்கை வாரியம் இன்னும் சான்றிதழ் அளிக்காத நிலையில், பி.எம். நரேந்திர மோடி திரைப்படத்துக்கு இடைக்காலத் தடை விதிக்க முடியாது என்று உச்சநீதிமன்றம் தெரிவித்தது. இத்திரைப்படத்தில் ஆட்சேபத்துக்குரிய காட்சிகள் இருப்பதற்கான ஆதாரங்களை அடுத்தகட்ட விசாரணையின்போது மனுதாரர் தரப்பு அளித்தால், திரைப்படத்தின் வெளியீட்டுக்கு இடைக்காலத் தடை விதிப்போம் என்றும் நீதிபதிகள் கூறினர்.

அதையடுத்து மனுவின் அடுத்தகட்ட விசாரணை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய், நீதிபதிகள் தீபக் குப்தா, சஞ்சீவ் கன்னா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. அப்போது பி.எம். நரேந்திர மோடி திரைப்படத்தின் 2 நிமிட முன்னோட்டக் காட்சியை நீதிபதிகளிடம் மனுதாரர் சமர்ப்பித்தார். அதைப் பார்த்த நீதிபதிகள், வெறும் 2 நிமிட காட்சியை அடிப்படையாகக் கொண்டு திரைப்படத்துக்கு தடை விதிக்க முடியாது. இந்தத் திரைப்படம் இன்னும் தணிக்கைச் சான்றிதழ் கூட பெறவில்லை. தேர்தல் தினத்தன்று திரைப்படம் வெளியிடுவதாக மனுதாரர் தரப்பில் கூறப்படுகிறது. அப்படியானால், இந்த விவகாரத்தை தேர்தல் ஆணையத்திடம்தான் முறையிட வேண்டும். நாங்கள் இந்த மனுவை விசாரிக்க முடியாது என்று கூறி, காங்கிரஸ் ஆர்வலரின் மனுவை தள்ளுபடி செய்தனர்.

இந்தப் படம் நாளை வெளியாக இருந்த நிலையில், இப்படத்தை வெளியிட இடைக்காலத் தடை விதித்துள்ளது தேர்தல் ஆணையம். மக்களவைத் தேர்தல் நேரத்தில் யாருடைய வாழ்க்கை வரலாற்றுப் படமும் வெளியிடப்பட அனுமதி அளிக்கப்படமாட்டாது என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com