ரஜினி தொடர்பான நிகழ்ச்சிகளில் ரஜினி அனுமதி அளிக்காமல் நான் கலந்துகொள்ளமாட்டேன் என்று நடிகரும் இயக்குநருமான ராகவா லாரன்ஸ் கூறியுள்ளார்.
ராகவா லாரன்ஸ் ட்விட்டரில் கூறியதாவது:
நண்பர்களே, சிறிய விஷயம் ஒன்றைக் குறிப்பிட விரும்புகிறேன். தலைவர் தொடர்பான எந்த விழாக்களிலும் அவருடைய அனுமதின்றி கலந்துகொள்ள மாட்டேன். இதற்குப் பின்னால் பல காரணங்கள் உள்ளன. அவற்றைத் தெரிவிக்க நான் விரும்பவில்லை. அவருடைய ஆசிர்வாதம் மட்டுமே வேறு எதையும் விடவும் எனக்கு முக்கியமானது ஆகும் என்று கூறியுள்ளார்.
மேலும் ஃபேஸ்புக்கில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியதாவது:
என்னுடைய பேச்சுகள், பதிவுகள் அனைத்தும் நானே சொந்தமாகக் கூறுவதாகும். என்னுடைய கருத்துகள் எதற்கும் தலைவர் சூப்பர் ஸ்டார் பொறுப்பாக மாட்டார். இப்படிப் பேசவேண்டும் என அவர் எனக்குச் சொல்வதாகச் சிலர் சொல்கிறார்கள். அது தவறு. தனக்குத் தேவையானதை அவரே பேசுவார். அடுத்தவரைப் பயன்படுத்த மாட்டார். எதுவும் அவரைப் பாதிக்க விரும்பமாட்டேன். அவருடைய ஆசிர்வாதம் மற்றும் அவருடனான புகைப்படம் ஆகியவற்றைத் தவிர அவரிடம் வேறு எதையும் நான் எதிர்பார்ப்பதில்லை. நான் எந்த அரசியல் கட்சிகும் எதிரானவன் கிடையாது. நான் யாரையும் ஆதரிக்கவில்லை என்று கூறியுள்ளார்.
சமீபத்தில் நடைபெற்ற தர்பார் பாடல் வெளியீட்டு விழாவில் பேசிய நடிகரும் இயக்குநருமான ராகவா லாரன்ஸ், தலைவர் (ரஜினி) படம் வெளியாகும்போது, போஸ்டர் ஒட்டும்போது சண்டை போட்டுள்ளேன். கமல் சார் போஸ்டர் ஒட்டினால் அதில் சாணி அடிப்பேன். அப்போது என்னுடைய மனநிலை அப்படி இருந்தது. இப்போது தான் தெரிகிறது, இருவரும் நெருங்கிய நண்பர்கள் என்று எனப் பேசினார். ராகவா லாரன்ஸின் பேச்சுக்கு கமல் ரசிகர்கள் எதிர்ப்பு தெரிவித்தார்கள். இதையடுத்து, சிறிய வயதில் தெரியாமல் செய்த விஷயம் அது. கமல் சார் மீது அதிக மரியாதை வைத்துள்ளேன் என்று கூறினார் லாரன்ஸ். பிறகு, கமலை நேரில் சந்தித்து தன் பேச்சுக்கு விளக்கம் அளித்தார்.