'தடையற தாக்க', 'மீகாமன்' படங்களுக்குப் பின் மகிழ்திருமேனி எழுதி இயக்கி வரும் படம் "தடம்'. அருண் விஜய், தன்யா ஹோப், வித்யா பிரதீப், ஸ்ம்ருதி வெங்கட் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். படம் குறித்து இயக்குநர் பேசும் போது...
'மீகாமன்' படத்துக்குப் பின் நான் இயக்க வேண்டிய திரைக்கதை வேறு ஒன்றாகத்தான் இருந்தது. அந்தத் திரைக்கதைக்கான சில ஆய்வுகள் நடந்து கொண்டிருந்தது. அப்போது ஒரு விஷயம் என் கண்களுக்கு வந்தது. அது ஒரு உண்மை சம்பவம். எதார்த்தம் என்பது கற்பனையைக் காட்டிலும் விநோதமானது. அதிசயிக்கதக்கது. அது மாதிரியான ஒரு சம்பவம் அது. இது மாதிரி நடக்குமா.. என்று கூட தோன்றியது. அதை பின் தொடர்ந்து போய் பார்த்தால், உலகம் நெடுகிலும் அந்தப் பிரச்னை நடந்துக் கொண்டே இருப்பதாகத் தெரிந்தது. கொஞ்சம் நிதானித்துப் பார்த்தால், அதில் சினிமாவுக்கான அவ்வளவு சங்கதிகள் இருந்தன. அப்படி எழுத ஆரம்பித்ததுதான் ’தடம்’ படத்தின் ஆரம்பப் புள்ளி.
பிளாக் காமெடியாக எழுத வேண்டும் என்றுதான் ஆரம்பித்தேன். ஆனால், கதை ஒரு கட்டத்துக்குப் பின் தன்னைத் தானே எழுதிக் கொள்ளும் என்பார்கள். அப்படி அதன் அம்சங்களை இந்தக் கதை அதுவாகவே தேடிக் கொண்டது. அப்படி ஆரம்பமான ஒரு பயணம்தான் இது. ஒரு குற்றமும், அந்தக் குற்றத்தை செய்யத் தூண்டக் கூடிய அம்சங்களும்தான் இதன் ஆதாரம். ஒரு குற்றத்தின் மூலம் எங்கே ஆரம்பிக்கிறது. அது அந்த மனிதனை எங்கே நிறுத்துகிறது. அதன் விளைவுகள் என்ன என்பதுதான் இதன் பேசும் பொருள்' என்றார்.
சினிமா எக்ஸ்பிரஸ் சிறப்பு நிருபர் நவீன் தர்ஷன் இயக்குநர் மகிழ் திருமேனியை எடுத்த நேர்காணலின் காணொளி