மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் 56-வது பிறந்த நாளையொட்டி,சிங்கப்பூரில் உள்ள மேடம் டூஸாட் மெழுகுச்சிலை மியூசியத்தில் அவரது சிலை இடம் பெறும் எனக் கடந்த மாதம் அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், ஸ்ரீதேவியின் திரையுலகச் சாதனையைக் கௌரவிக்கும் வகையில் சிங்கப்பூர் மேடம் டூஸாட் மியூசியத்தில் அவரது மெழுகுச்சிலை இடம் பெற்றுள்ளது. இன்று நடைபெற்ற சிலை திறப்பு விழாவில் ஸ்ரீதேவியின் குடும்பத்தினர் கலந்துகொண்டார்கள். மிஸ்டர் இந்தியா படத்தில் ஸ்ரீதேவி நடித்த கதாபாத்திரத்தின் வடிவம் சிலையாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
கடந்த வருடம், துபையில் உறவினர் இல்லத் திருமண விழாவில் பங்கேற்பதற்காக கணவர் போனி கபூர் மற்றும் குடும்பத்தினருடன் சென்ற நடிகை ஸ்ரீதேவி நட்சத்திர ஹோட்டலில் தங்கினார். அங்கு மயங்கிய நிலையில் குளியல் அறைத் தொட்டியில் மூழ்கி இறந்ததாக அறிவிக்கப்பட்டது.