பாகுபலி 2 படத்துக்கு அடுத்ததாக, எஸ்.எஸ். ராஜமெளலி ஆர்ஆர்ஆர் என்கிற படத்தை இயக்கி வருகிறார். இதன் தொடக்கவிழா, கடந்த வருடம் நவம்பர் மாதம் நடைபெற்றது.
ஜூனியர் என்டிஆர், ராம் சரண் நடிப்பில் டிவிவி தனய்யா-வின் டிவிவி எண்டெர்டயிண்மெண்ட் இப்படத்தைத் தயாரிக்கிறது. முதல்முறையாக ஜூனியர் எடிஆரும் ராம் சரணும் இணைந்து நடிக்கிறார்கள். ராஜமெளலியும் ஜூனியர் என்டிஆரும் இதற்கு முன்பு மூன்று படங்களில் இணைந்துள்ளார்கள். மகதீராவுக்குப் பிறகு ராஜமெளலியும் ராம் சரணும் இப்படத்தில் மீண்டும் இணைகிறார்கள். ஆர்ஆர்ஆர் படத்துக்கு கீரவாணி இசையமைக்கிறார். ஒளிப்பதிவு - கே.கே. செந்தில் குமார். அல்லுரி சீதாராமராஜூ, கொமரம் பீம் என்கிற இரு சுதந்திரப் போராட்ட வீரர்களை வாழ்க்கையை முன்வைத்து ஆர்ஆர்ஆர் படத்தின் கதை உருவாக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் கதை 1920களில் நடைபெறுகிறது.
பாலிவுட் நடிகர்கள் அஜய் தேவ்கன், ஆலியா பட், இங்கிலாந்து நடிகை டெய்ஸி எட்கர் ஜோன்ஸ், தமிழ் நடிகர் சமுத்திரக்கனி போன்றோரும் நடிப்பதாகச் சமீபத்தில் அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் ஜூனியர் என்டிஆர்-க்கு ஜோடியாக நடிக்கவிருந்த இங்கிலாந்து நடிகை டெய்ஸி எட்கர் ஜோன்ஸ் இப்படத்திலிருந்து விலகியுள்ளார். தவிர்க்கமுடியாத காரணங்களால் அவர் விலகியுள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், அஹமதாபாத் ஷெட்யூல் நல்லபடியாக முடிந்துள்ளதாக ட்விட்டரில் அறிவித்துள்ளார் ராஜமெளலி. படப்பிடிப்பில் ராம் சரணுக்குக் காயம் ஏற்பட்ட நிலையில் படப்பிடிப்பு சில நாள்கள் நிறுத்திவைக்கப்பட்டது. எனினும் குஜராத்தில் எடுக்கவேண்டிய காட்சிகள் தாமதமில்லாமல் எடுக்கப்பட்டுள்ளன. தெலுங்கு, தமிழ், ஹிந்தி, மலையாளம் மற்றும் இதர இந்திய மொழிகளில் 2020-ம் வருடம் ஜூலை 30 அன்று ஆர்ஆர்ஆர் வெளியாகவுள்ளது.