‘நேருக்கு நேர்’ கெளசல்யாவை மறந்திருக்க மாட்டீர்கள். அந்தப் படத்தின் அகிலா, அகிலா பாடலுக்குப் பின் அன்றைய கல்லூரி மாணவர்கள் கம் இன்றைய அங்கிள்களை பைத்தியம் பிடிக்க வைத்தவர். ‘இதயம்’ முரளியுடன் இணைந்து நடித்த படத்திலும் கெளசல்யாவுக்கு அப்போது நல்ல ரீச் இருந்தது. தொடர்ந்து விஜயுடன் ‘ப்ரியமுடன்’, பிரபுதேவாவுடன் ‘வானத்தைப் போல’ கார்த்திக்குடன் ‘பூ வேலி’ ‘சந்திப்போமா’ லிவிங்ஸ்டனுடன் ‘சொல்லாமலே’ என்று குறிப்பிடத்தக்க அளவில், தமிழின் முக்கியமான நடிகர்களுடன் இணைந்து நடித்த போதும் கெளசல்யாவால் தமிழில் நீண்ட காலம் நிலைத்திருக்க முடியவில்லை. நடுவில் சில காலம் கெளசல்யாவைத் தமிழ் திரைப்படங்களில் காண முடியவில்லை.
இத்தனைக்கும் கெளசல்யாவுக்கு நடிப்புடன் நல்ல நடனத்திறமையும் இருந்தது. அதற்கு சாட்சி வானத்தைப் போல திரைப்படத்தில் பிரபுதேவாவுடன் ஆடிய ‘நதியே நைல் நதியே’ பாடலே! ஆனாலும் கெளசல்யாவை கோலிவுட் கைவிட்டு விட்டது. நாயகி எனும் படியிலிருந்து இறங்கி விஷாலின் ‘பூஜை’ மூலமாக குணச்சித்திர வேடங்களில் திரும்ப வந்தார்.
இதற்கிடையில் அவருடன் சம காலத்தில் நடிக்க வந்த அத்தனை நடிகைகளும் திருமணமாகி குடும்ப செட்டிலாகி விட கெளசல்யா மட்டுமே இதுவரை திருமணம் செய்து கொள்ளாதவராக இருந்தார்.
தற்போது வெள்ளித்திரையில் குணச்சித்திர வேடங்களுடன், சின்னத்திரையில் நாயகியாகவும் நடித்து வரும் கெளசல்யாவுக்கு வயது 38. இத்தனை காலம் தனக்கு திருமணத்தில் நாட்டம் இல்லாதிருந்ததால் அதைப் பற்றி யோசிக்கவில்லை என்றும், தற்போது திருமண வாழ்வைப் பற்றி யோசிக்கத் தொடங்கி இருப்பதால் கூடிய விரைவில் திருமணம் செய்து கொள்ளவிருப்பதாகவும் கெளசல்யா கடந்த சில தினங்களுக்கு முன் அறிவித்திருக்கிறார். இதில் வேடிக்கை என்னவென்றால் கெளசல்யா நடுவே சில காலம் தமிழில் நடிக்காதிருந்த நாட்களில் அவர் திருமணமாகி குடும்ப வாழ்வில் ஆழ்ந்து விட்டார் என்று நினைத்திருந்த கெளசல்யா ரசிகர்களுக்கு தற்போது இச்செய்தி ஆச்சர்யத்தைக் கிளறிவிட்டுள்ளது. ஓ... இனிமேல் தான் இவர் திருமணம் செய்து கொள்ளப் போகிறாரா? என்ற ரீதியில் இந்தச் செய்தியைக் கடந்து கொண்டிருக்கிறார்கள் அவர்கள்.