
பாடகா் எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் உடல்நிலை சீராக உள்ளதாக அவருடைய மகன் எஸ்.பி. சரண் கூறியுள்ளார்.
சமீபத்தில், பாடகா் எஸ்.பி.பாலசுப்ரமணியத்துக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதைத் தொடா்ந்து, அவா் எம்ஜிஎம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.
பிறகு, எஸ்.பி.பியின் உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டது. தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள அவருக்குச் செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வருவதாக எம்ஜிஎம் மருத்துவமனை தெரிவித்தது.
இதனால் உலகமெங்கிலும் உள்ள எஸ்.பி.பி. ரசிகர்கள் கவலையடைந்தார்கள். சமூகவலைத்தளங்களில் எஸ்.பி.பி.யின் உடல்நிலை குறித்து தங்கள் வேதனையை வெளிப்படுத்தினார்கள். ரஜினி, கமல், இளையராஜா, ஏ.ஆர். ரஹ்மான் உள்பட திரையுலகப் பிரபலங்களும் எஸ்.பி.பி உடல்நிலை குறித்து தங்கள் வேதனையை விடியோவாகவும் ட்வீட்டாகவும் வெளியிட்டார்கள்.
கடந்த சில நாள்களாக தனது தந்தையின் உடல்நிலை குறித்த தகவல்களை விடியோவாக வெளியிட்டு வருகிறார் எஸ்.பி. சரண். இன்று வெளியிட்டுள்ள விடியோவில் கூறியுள்ளதாவது:
கரோனாவுக்குச் சிகிச்சை பெற்று வரும் எனது தந்தை எஸ்.பி.பி. உடல்நிலை நேற்று போல இன்றும் சீராக உள்ளது. எந்தவொரு சிக்கலும் இல்லை. இது நல்ல அறிகுறி என மருத்துவர்கள் எண்ணுகிறார்கள். எனது தந்தைக்காகப் பிரார்த்தனை செய்த அனைவருக்கும் நன்றி என்று கூறியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.