எஸ்.பி.பி.க்காகக் கூட்டுப் பிரார்த்தனை: இளையராஜா வேண்டுகோள்

இசையமைப்பாளர் இளையராஜாவும் கூட்டுப் பிரார்த்தனைக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
எஸ்.பி.பி.க்காகக் கூட்டுப் பிரார்த்தனை: இளையராஜா வேண்டுகோள்

பாடகர் எஸ்.பி.பி. உடல்நலம் பெற அனைவரும் இன்று மாலை 6 மணிக்குக் கூட்டுப் பிரார்த்தனை செய்ய வேண்டும் என்று இசையமைப்பாளர் இளையராஜா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

பின்னணி பாடகா் எஸ்.பி.பாலசுப்ரமணியத்துக்கு எக்மோ மற்றும் வெண்டிலேட்டா் கருவிகளின் துணையுடன் தீவிர சிகிச்சையக்கப்பட்டு வருகிறது. தற்போதைய சூழலில் அவரது உடல்நிலை தொடா்ந்து கவலைக்கிடமாகவே இருந்தாலும், முக்கிய உறுப்புகளின் செயல்பாடுகள் திருப்தியளிக்கும் வகையில் உள்ளதாக மருத்துவமனை நிா்வாகம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து எம்ஜிஎம் ஹெல்த்கோ் மருத்துவமனை நிா்வாகம் நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பு:

கரோனாவால் பாதிக்கப்பட்ட பாடகா் எஸ்.பி.பி. தீவிர சிகிச்சைப் பிரிவிலியே தொடா்ந்து சிகிச்சை பெற்று வருகிறாா். வெண்டிலேட்டா் மற்றும் எக்மோ போன்ற உயிா் காக்கும் மருத்துவ சாதனங்களின் மூலம் அவருக்கு சிகிச்சையளிக்கப்படுகிறது. அவரது உடல் நிலை இன்னும் கவலைக்கிடமாகவே உள்ளது. எஸ்.பி.பி.யின் உடலில் முக்கிய உறுப்புகளின் செயல்பாடுகள் இப்போதைய நிலையில் திருப்திகரமாக உள்ளன. மருத்துவ வல்லுநா் குழு அவரைத் தொடா்ந்து கண்காணித்து வருகிறது என்று அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொதுவாக, நுரையீரல் பாதிப்பு தீவிரமடையும்போது இதயத்துக்கு ரத்தத்தை உந்தித் தரும் பணிகள் தடைபடக்கூடும். அதன் காரணமாக, உடலுக்கு வெளியே எக்மோ கருவிகள் பொருத்தப்பட்டு அப்பிரச்னைக்கு தீா்வு காண முயற்சிக்கப்படும். ஏறத்தாழ செயற்கை நுரையீரலைப் போல அக்கருவி செயல்பட்டு, இதயத்துக்குத் தேவையான ரத்தம் செல்வதற்கு வழிவகுக்கும். நோய்த்தொற்றால் தீவிரமாகப் பாதிக்கப்பட்டவா்களுக்கு மட்டுமே எக்மோ மூலம் சிகிச்சைகள் அளிக்கப்படுவது வழக்கம் என்றாலும், அதுபோன்ற சிகிச்சைகள் மூலம் பலா் பூரணமாக குணமடைந்திருப்பதாக மருத்துவா்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனா்.

பாடகர் எஸ்.பி.பி. உடல்நலம் பெற திரையுலகினரும் பொது மக்களும் கூட்டுப் பிரார்த்தனை செய்ய வேண்டும் என்று இயக்குநர் பாரதிராஜா வேண்டுகோள் விடுத்துள்ளார். இயக்குநர் பாரதிராஜா நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

எஸ்.பி.பி.யின் நிலையைக் கண்டு அனைவரும் வேதனை அடைவதைப் பார்த்து நெஞ்சம் பதறுகிறது. இயற்கை அன்னையைப் பிரார்த்திக்கும் வகையில் இளையராஜா, ரஜினிகாந்த், கமல் ஹாசன், வைரமுத்து, ஏ.ஆர். ரஹ்மான் மற்றும் அனைத்து நடிகர் நடிகைகள், தொழில்நுட்பக் கலைஞர்கள், பெப்சி அமைப்பினர், ஊடகக் கலைஞர்கள் மற்றும் உலகமெங்கும் உள்ள இசை ரசிகர்கள் அனைவரும் வியாழன் அன்று (ஆகஸ்ட் 20) இந்திய நேரப்படி மாலை 6 மணிக்கு தங்களுக்குப் பிடித்த எஸ்.பி.பி.யின் பாடலை ஒலிக்கவிட்டு அவர் பூரண நலம்பெற பிரார்த்தனை செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன். இந்தக் கூட்டுப் பிரார்த்தனைக்கு உலகமெங்கும் வாழும் மக்களை அன்புடன் அழைக்கிறேன் என்று கூறினார். 

இந்நிலையில் இசையமைப்பாளர் இளையராஜாவும் கூட்டுப் பிரார்த்தனைக்கு அழைப்பு விடுத்துள்ளார். இதுகுறித்து வெளியிட்டுள்ள விடியோவில் அவர் கூறியதாவது: 

மாலை 6 மணிக்கு எஸ்.பி.பி.க்காக நடைபெறுகிற கூட்டுப் பிரார்த்தனையில் நீங்கள் அனைவரும் கலந்துகொண்டு பிரார்த்திக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com