தனக்கு மாரடைப்பு ஏற்பட்டிருப்பதால் மருத்து உதவி செய்யுங்கள் என நகைச்சுவை நடிகர் பெஞ்சமின் உருக்கமாக வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ஆட்டோகிராப், திருப்பாச்சி, வசூல்ராஜா எம்.பி.பி.எஸ்., ஐயா, திருப்பதி போன்ற படங்களில் நகைச்சுவை மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்தவர் பெஞ்சமின். தனக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளதால் மருத்து உதவி கோரி விடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியதாவது:
எனக்கு மாரடைப்பு ஏற்பட்டு சேலத்தில் ரெண்டு, மூன்று நாள்கள் சிகிச்சை எடுத்துக்கொண்டேன். அறுவை சிகிச்சை செய்யும் அளவுக்கு வசதியில்லை. பெங்களூர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல சொல்லியிருக்கிறார்கள். இப்போது பெங்களூர் சென்று கொண்டிருக்கிறோம். எவ்வளவு செலவாகிறது எனத் தெரியவில்லை. நண்பர்கள் உங்களுக்குத் தெரிந்த மருத்துவ நண்பர்களிடம் கூறி, ஏதாவது மருத்துவ உதவி செய்யவேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன் என்றார்.