சென்னை: வரும் ஜூன் 19 முதல் சின்னத்திரை படபிடிப்புகளையும், சினிமாவுக்கான போஸ்ட் புரொடெக்ஷன் பணிகளையும் நிறுத்த அறிவுறுத்தப்பட்டு உள்ளதாக ஃபெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் நிலவி வரும் கரோனா நோய்த்தொற்றின் காரணமாக முடங்கியிருந்த சின்னத்திரை படபிடிப்புகளையும், சினிமாவுக்கான போஸ்ட் புரொடெக்ஷன் பணிகளையும் மீண்டும் துவங்க கடந்த மாதம்தான் கடுமையான நிபந்தனைகளுடன் தமிழக அரசு அனுமதி வழங்கியிருந்தது.
தற்போது கரோனா பரவும் வேகம் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்டங்களிலும் கடுமையாக அதிகரித்துள்ளது. இதையடுத்து அதனைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக இந்த நான்கு மாவட்டங்களிலும் வரும் ஜூன் 19 முதல் முழுமையான ஊரடங்கை தமிழக அரசு திங்களன்று அறிவித்தது.
இதையடுத்து வரும் ஜூன் 19 முதல் சின்னத்திரை படபிடிப்புகளையும், சினிமாவுக்கான போஸ்ட் புரொடெக்ஷன் பணிகளையும் நிறுத்த சம்பந்தப்பட்டவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளதாக ஃபெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி தெரிவித்துள்ளார்.
தமிழக அரசு முழு முடக்கத்தை அறிவித்துள்ளதால் சின்னத்திரை படப்பிடிப்புகள் நிறுத்தப்பட வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.