பாகுபலி படத்தில் நடித்து அகில இந்திய அளவில் புகழ்பெற்றவர் ராணா டகுபதி.
2010-ல் லீடர் என்கிற தெலுங்குப் படம் மூலமாகத் திரையுலகில் அறிமுகமானார். பாகுபலி படம் தான் இவரை புகழின் உச்சத்துக்குக் கொண்டு நிறுத்தியது. ஆரம்பம், இஞ்சி இடுப்பழகி, பெங்களூர் நாட்கள், எனை நோக்கி பாயும் தோட்டா ஆகிய தமிழ்ப் படங்களில் நடித்துள்ளார்.
இந்நிலையில் தன்னுடைய காதலியை உலகுக்கு அறிமுகப்படுத்தினார் ராணா டகுபதி. மிஹீகா பஜாஜின் புகைப்படத்தை இன்ஸ்டகிராமில் வெளியிட்டு எனக்குச் சம்மதம் சொன்னார் என ராணா குறிப்பிட்டுள்ளார். ஹைதராபாத்தைச் சேர்ந்த மிஹீகா, டியூ டிராப் டிசைன் ஸ்டூடியோவின் நிறுவனர்.
ராணாவின் தந்தையும் தெலுங்குத் தயாரிப்பாளருமான சுரேஷ் பாபு ஒரு பேட்டியில் கூறியதாவது: இருவருக்கும் நீண்ட நாளாகப் பழக்கம் உண்டு. ஒட்டுமொத்தக் குடும்பமும் மகிழ்ச்சியாக உள்ளோம். திருமணம் இந்த வருடம் நடைபெறும். திருமணம் பற்றிய மேலதிகத் தகவல்களை உரிய நேரத்தில் அறிவிப்போம். என்றார்.
ராணாவின் இந்த அறிவிப்புக்குத் திரையுலகப் பிரபலங்களும் ரசிகர்களும் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.