800 படத்தில் போர் காட்சிகள் உள்ளதால் இளவயது முரளிதரன் வேடத்தில் நடிக்க மறுத்த அசுரன் நடிகர்

என் அம்மா ஒரு ஈழத்தமிழர். போர் குறித்த காட்சிகள் கதையில் உள்ளன. எனக்கு அது சரியாகப் படவில்லை.
அசுரன் படத்தில் டீஜே அருணாச்சலம்
அசுரன் படத்தில் டீஜே அருணாச்சலம்

800 படத்தில் இளவயது முரளிதரனாக நடிக்கக் கிடைத்த வாய்ப்பை அசுரன் புகழ் டீஜே அருணாச்சலம் மறுத்துள்ளார். 

133 டெஸ்டுகள், 350 ஒருநாள், 12 டி20 ஆட்டங்களில் விளையாடி இலங்கையின் மகத்தான கிரிக்கெட் வீரராக அறியப்பட்டுள்ள முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் நடிக்கிறார் விஜய் சேதுபதி. இப்படத்துக்கு 800 என பெயர் வைக்கப்பட்டுள்ளது. டெஸ்ட் கிரிக்கெட்டில் 800 விக்கெட்டுகளை எடுத்துள்ளதால் இந்தப் பெயர் சூட்டப்பட்டுள்ளது. 

தமிழ் உள்ளிட்ட பல மொழிகளில் வெளியாகவுள்ள இந்தப் படத்தை எம்.எஸ். ஸ்ரீபதி இயக்குகிறார். இலங்கை, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, இந்தியா ஆகிய நாடுகளில் படமாக்கப்படவுள்ளது. அடுத்த வருடத் தொடக்கத்தில் இதன் படப்பிடிப்பு ஆரம்பமாகும். 2021 வருட இறுதியில் வெளியிடத் திட்டமிடப்பட்டுள்ளது. தமிழில் உருவாகும் இப்படம் தென்னிந்திய மொழிகளில் மட்டுமில்லாமல் ஹிந்தி, வங்காளம், சிங்களம் ஆகிய மொழிகளிலும் டப் செய்யப்படும்.

எனினும்  இலங்கை அரசுக்கு ஆதரவளிக்கும் முரளிதரனின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் விஜய் சேதுபதி நடிக்க வேண்டுமா என்று பலரும் கேள்வி எழுப்பியுள்ளார்கள். முரளிதரனாக விஜய் சேதுபதி நடிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து சமூகவலைத்தளங்களில் பலரும் பதிவுகள் எழுதியுள்ளார்கள். #ShameOnVijaySethupathi என்கிற ஹேஷ்டேக் ட்விட்டரில் டிரெண்டானது. 

இந்நிலையில் இந்தப் படத்தில் நடிக்கும் வாய்ப்பை அசுரன் படத்தில் நடித்துக் கவனம் பெற்ற நடிகர் டீஜே அருணாச்சலம் மறுத்துள்ளார். அசுரன் படத்தில் தனுஷின் மகனாக அவர் நடித்தார். 800 படம் பற்றி ஒரு ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் டீஜே அருணாச்சலம் கூறியதாவது:

இந்தியாவில் நான் இருந்தபோது 800 படக்குழுவினர் என்னை அணுகினார்கள். முரளிதரனின் இளமைக்காலக் கதாபாத்திரத்தில் நான் நடிக்க வேண்டும் என்றார்கள். இயக்குநரை அவருடைய அலுவலகத்தில் சந்தித்தேன். கதையின் சில பகுதிகளைச் சொன்னார். தமிழர்களுக்கும் இலங்கை அரசுக்கும் இடையிலான போர் குறித்த காட்சிகள் கதையில் உள்ளன. எனக்கு அது சரியாகப் படவில்லை. என் அம்மா ஒரு ஈழத்தமிழர். போரில் ஏராளமான கொடுமைகள் நடைபெற்றுள்ளன. கதையின் போக்கில் உள்ள அரசியலில் என்னை ஈடுபடுத்திக்கொள்ள விரும்பவில்லை. எனவே நடிக்க விருப்பம் இல்லை என்று கூறிவிட்டேன் என்றார்.

பிறகு, தன்னுடைய ஃபேஸ்புக்கில் டீஜே அருணாச்சலம் கூறியதாவது:

என் முடிவில் உறுதியாக உள்ளேன். அனைவருடைய ஆதரவுக்கும் நன்றி. என் தாய்மொழியிலிருந்து தான் இவ்வுலகுக்கு வந்துள்ளேன் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com