இயக்குநர் கெளதம் மேனன், திரையுலகுக்கு வந்து 20 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி, சிங்கப்பூரில் ஓர் இசை நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்காக, கெளதம் மேனன் குறித்து சூர்யா கூறியதாவது:
1998-ல் எழும்பூரில் உள்ள ஒரு ஹோட்டலில் கெளதமைச் சந்தித்துப் பேசினேன். பிறகு காக்க காக்க வந்தது. காக்க காக்க, வாரணம் ஆயிரம் ஆகிய இரு படங்களும் இல்லாமல் போயிருந்தால் என்னுடைய திரைப்பயணம் எப்படி இருந்திருக்கும்? பல இயக்குநர்கள் இந்த இடத்தில் ஒரு பாடல் என்று மட்டும் தான் எழுதுவார்கள். ஆனால், திரைக்கதைக் குறிப்பிலேயே, பாடலைப் பதிவு செய்வதற்கு முன்பு, பாடல் இப்படித்தான் இருக்கும், வரிகள் இப்படித்தான் இருக்கும் என்று நீங்கள் எழுதி வைப்பீர்கள். உயிரின் உயிரே பாடல் தயாரானவுடன் அதை நானும் அவரும் 100 முறையாவது கேட்டிருப்போம். நானும் கிடாரைக் கற்றுக்கொண்டு ஜோதிகாவின் பிறந்தநாளுக்கு நெஞ்சுக்குள் பெய்திடும் பாடலின் வரிகளைப் பாடினேன். அந்த விடியோவை, கெளதமுக்கு வெட்கமே இல்லாமல் போட்டுக் காண்பித்தேன். அவரே நடனம் அமைப்பார், ஆடுவார். வாரணம் ஆயிரம் பாடல்களில் நிறைய நல்ல நினைவுகள் உள்ளன. இசை, கெளதமின் வாழ்க்கையில் ஓர் அங்கம். காற்று போல கெளதமின் குடும்பத்துக்கு இசை. அதனால் தான் பாடலின் மூலம் மேஜிக்கை நிகழ்த்துகிறார். இந்தக் காரணத்தினால் தான் அவருடைய படங்களின் பாடல்களின் தரம் ஒவ்வொரு முறையும் இன்னும் சிறப்பாக உள்ளது.
மீண்டும் இருவரும் இணைந்து பணியாற்ற வேண்டும் என விரும்புகிறேன். நீங்கள் சொன்னால் கிடாரை மீண்டும் தூக்க நான் தயார் கெளதம் என்று கூறியுள்ளார்.