ஒளிப்பதிவாளர் கண்ணன்: பாரதிராஜாவின் கண்களும் பார்ட்னரும்!

என் வாழ்க்கையில் என் மனைவி, குழந்தைகளிடம் நேரத்தைச் செலவழித்ததை விடவும் கண்ணனுடன் படப்பிடிப்பில் செலவழித்த நேரம் தான் அதிகம்.
ஒளிப்பதிவாளர் கண்ணன்: பாரதிராஜாவின் கண்களும் பார்ட்னரும்!

நான் படப்பிடிப்புக்குச் செல்லும்போது கேமராவை எடுத்துச் செல்வதில்லை. என் கண்ணனுடைய இரண்டு கண்களை மட்டும்தான் எடுத்துச் செல்வேன். அந்தக் கண்களுக்கு மட்டும்தான் ஆகாயத்தின் மறுபுறத்தையும் பார்க்கத் தெரியும்...

ஒளிப்பதிவாளர் கண்ணனைப் பற்றி பாரதிராஜா பேசிய புகழ்பெற்ற வார்த்தைகள் இவை.

பாரதிராஜாவின் படம் என்றால் ஒளிப்பதிவு கண்ணன் தான் என்று சொல்லும் அளவுக்கு இருவருடைய கூட்டணியும் தமிழ்த் திரையுலகில் மிகவும் புகழ்பெற்றதாகும்.

இத்தனைக்கும் பாரதிராஜாவின் முதல் படத்தில் மட்டுமல்ல ஆரம்பத்தில் பாரதிராஜா இயக்கிய சில படங்களுக்கு ஒளிப்பதிவு செய்தவர் கண்ணன் அல்லர், நிவாஸ்.

16 வயதினிலே, கிழக்கே போகும் ரயில், புதிய வார்ப்புகள், நிறம் மாறாத பூக்கள், கல்லுக்குள் ஈரம் வரைக்கும் நிவாஸ் தான் ஒளிப்பதிவு செய்தார். இதன்பின்னர் நிழல்கள் படத்தில் ஆரம்பித்து பொம்மலாட்டம் வரை கண்ணனின் கொடி தான் பாரதிராஜாவின் கோட்டையில் பறந்தது.

1975-ல் திரைப்படக் கல்லூரியில் படித்தவர் கண்ணன். புதிய வார்ப்புகள் படம் பார்த்தபோதுதான் பாரதிராஜா படத்துக்கு ஒளிப்பதிவு செய்யவேண்டும் என்கிற ஆர்வம் கண்ணனுக்கு ஏற்பட்டது. பாரதிராஜா போல ஓர் இயக்குநர் கிடைத்தால் ஒளிப்பதிவுக்காக என்னால் பெயர் வாங்க முடியும் என்று நண்பர்களிடம் கண்ணன் கூறியிருக்கிறார். எண்ணியதுபோலவே புதிய வார்ப்புகள் படத்தின் தெலுங்குப் படத்தில் பணியாற்றும் வாய்ப்பு கண்ணனுக்குக் கிடைத்துள்ளது.

பாரதிராஜாவுடன் பணியாற்றுவது பற்றி ஒரு பேட்டியில் கண்ணன் இவ்வாறு கூறியுள்ளார்:

முதல் இரண்டு படங்களில் பாரதிராஜாவின் ரசனையைப் புரிந்துகொண்டேன். இதனால் அவர் என்ன நினைக்கிறாரோ அதை என் கேமராவில் கொண்டுவந்துவிடுவேன் என்கிற நம்பிக்கை அவருக்கு ஏற்பட்டது. அவர் ஸ்பாட்டில் இல்லாவிட்டாலும் அவர் ரசனைக்கேற்றாற் போல ஷாட்டை எடுத்துவிடுவேன்.

பாடல் காட்சியைப் படமாக்கும்போது எனக்குச் சாதாரணமாகத் தெரிவதை எடிட்டிங் டேபிளில் அதற்குத் தனி உருவம் கொடுத்து விடுவார். அங்கு என்ன மாயம் செய்வாரோ யாருக்கும் தெரியாது. பாடல் காட்சியைப் படமாக்கிய நானே ஆச்சர்யப்படும் அளவுக்கு எடிட்டிங் டேபிளில் ஓவியமாக மாற்றி விடுவார். இதை கே. விஸ்வநாத் கூட பாராட்டியுள்ளார் என்று கூறியுள்ளார்.

நிழல்கள், அலைகள் ஓய்வதில்லை, டிக் டிக் டிக், காதல் ஓவியம், வாலிபமே வா வா, மண் வாசனை, புதுமைப்பெண், முதல் மரியாதை, ஒரு கைதியின் டைரி, கடலோரக் கவிதைகள், வேதம் புதிது, கொடி பறக்குது, என்னுயிர்த் தோழன், புது நெல்லு புது நாத்து, நாடோடித் தென்றல், கேப்டன் மகள், கிழக்குச் சீமையிலே, கருத்தம்மா, பசும்பொன், தமிழ் செல்வன், தாஜ்மஹால், கடல் பூக்கள், கண்களால் கைது செய், பொம்மலாட்டம் போன்ற பாரதிராஜா இயக்கிய படங்களுக்கு கண்ணன் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஒளிப்பதிவாளரும் நடிகருமான இளவரசு, கண்ணனின் உதவியாளராக 24 படங்களில் பணியாற்றியுள்ளார்.

வார இதழ் ஒன்றில் கண்ணன் பற்றி பாரதிராஜாவிடம் கேட்டதற்கு அவர் சொன்ன பதில்:

மை பார்ட்னர். என் வாழ்க்கையில் என் மனைவி, குழந்தைகளிடம் நேரத்தைச் செலவழித்ததை விடவும் கண்ணனுடன் படப்பிடிப்பில் செலவழித்த நேரம் தான் அதிகம்.

என் சிந்தனையை அழகாகத் திரையில் காட்டிவிடுவார் கண்ணன். அலைகள் ஓய்வதில்லை படத்தின் கதாநாயகித் தேர்வுக்காக கேரளாவில் உள்ள ஒரு கிராமத்துக்குச் சென்று ராதாவைப் பார்த்தோம். அப்போது அவர் வீட்டில் மின்சாரம் இல்லாததால் சிமிழ் விளக்கு வெளிச்சத்தில் தான் நானும் கண்ணனும் ராதாவைப் பார்த்தோம். நம்ம படத்துக்குச் சரிபட்டு வராது சார் என்றார் கண்ணன். இல்லை கண்ணன், இந்தப் பெண் தான் கதாநாயகி என்றேன். அதற்கு மேல் ஒரு வார்த்தை பேசவில்லை. ஆனால் நான் எதிர்பார்த்ததை விடவும் திரையில் ராதாவை அழகாகக் காண்பித்தார் கண்ணன். என் அலைவரிசையைப் பிடிப்பதில் கண்ணன் அந்த அளவுக்கு மாஸ்டர் என்று பாராட்டியிருந்தார்.

பாரதிராஜாவின் கூட்டணியில் தமிழர்களின் வாழ்வியல் கூறுகளைப் பதிவு செய்துவிட்டு சென்றிருக்கிறார். கண்ணன் அவர்களின் புகழ் என்றென்றும் நிலைத்து நிற்கும் என்று தனது இரங்கல் அறிக்கையில் கூறியுள்ளார் ஒளிப்பதிவாளரும் இயக்குநருமான தங்கர் பச்சான். எவ்வளவு உண்மையான வார்த்தைகள் இவை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com