மார்ச் 19-ம் தேதி முதல் அனைத்துவிதமான தமிழ்த் திரைப்படப் படப்பிடிப்புகளும் நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சீனாவின் வூஹான் நகரிலிருந்து பரவத் தொடங்கிய கரோனா வைரஸ் தற்போது உலகையே அச்சுறுத்தி வருகிறது. உலகம் முழுவதும் 116 நாடுகளில் பரவியுள்ள இந்த வைரஸால் இதுவரை 6,000-க்கும் மேற்பட்டோா் உயிரிழந்துவிட்டனா். இந்தியாவைப் பொறுத்தவரை இதுவரை 100 பேருக்கு மேல் இந்த வைரஸின் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், தென்னிந்தியத் திரைப்படத் தொழிலாளர் சம்மேளனத் தலைவர் ஆர்.கே. செல்வமணி, செய்தியாளர்களிடம் இன்று கூறியதாவது:
மார்ச் 19-ம் தேதி முதல் அனைத்துவிதமான தமிழ்த் திரைப்படப் படப்பிடிப்புகளும் நிறுத்தப்படும். சின்னத்திரைப் படப்பிடிப்புகளையும் நிறுத்த வேண்டுகோள் விடுத்துள்ளோம். மறு அறிவிப்பு வரும் வரை படப்பிடிப்புகள் நடைபெறாது. படப்பிடிப்பு தொடர்பான எந்தப் பணிகளிலும் ஈடுபட வேண்டாம் என்று கூறியுள்ளார்.
ஏற்கெனவே கரோனா அச்சுறுத்தல் காரணமாக ஹிந்திப் படப்பிடிப்புகள் மார்ச் 19 முதல் மார்ச் 31 வரை நடைபெறாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல தெலுங்கு, மலையாளப் படங்களின் படப்பிடிப்புகளும் நிறுத்தப்பட்டுள்ளன.