ஏராளமான தெலுங்கு படங்கள் மட்டுமல்லாமல் வீட்ல விசேஷங்க, பெரிய மருது உள்ளிட்ட பல தமிழ்ப் படங்களிலும் நடித்தவர் பிரகதி. 1994-ல் வீட்ல விசேஷங்க படத்தின் மூலமாகவே திரையுலகில் அறிமுகமானார்.
இந்நிலையில் இன்ஸ்டகிராமில் அளித்த ஒரு பேட்டியில் நடிகை பிரகதி பேசியதாவது:
அந்த நகைச்சுவை நடிகர் பல வருடங்களாக என்னுடன் நன்றாகத்தான் பழகி வந்தார். திடீரென ஒருநாள் அவருடைய நடவடிக்கைகள் சரியில்லாதது போல உணர்ந்தேன். ஒரு படப்பிடிப்பில் காலை 11 மணிக்கு இது நடந்தது. என்னால் அவருடைய கேவலமான நடவடிக்கையையும் பேச்சையும் ஜீரணம் செய்யமுடியவில்லை. மாலையில் அவரைத் தனியாக எதிர்கொள்வதற்காகக் காத்திருந்தேன்.
கேரவனில் அழைத்துச் சென்றேன். நான் தவறான சமிக்ஞைகளை அளித்தேனா அல்லது என்னுடைய உடல்மொழி அழைப்பது போல இருந்ததா என அவரிடம் கேட்டேன். இல்லை என்றார். படப்பிடிப்புத் தளத்தில் அவர் என்னுடன் பேசியது, நடந்துகொண்டது எதுவும் சரியில்லை, கேவலமானது, ஏற்றுக்கொள்ள முடியாதது என்று தெரிவித்தேன். படப்பிடிப்புத் தளத்தில் அனைவர் முன்னிலையிலும் இதைத் தெரிவித்திருப்பேன். ஆனால் உங்களுக்கு உள்ள மரியாதையைக் கருத்தில் கொண்டு இதுபற்றி தனியாகச் சொல்கிறேன் என்றேன் என்று தனக்கு ஏற்பட்ட அனுபவம் பற்றி பிரகதி பேசினார்.