மணிரத்னத்தின் நவரசா தொடர், ஒரு குறிப்பிட்ட சாதியை ஆதரிப்பதாக அமைந்துள்ளதாக இயக்குநர் லீனா மணிமேகலை தெரிவித்துள்ளார்.
இயக்குநர் மணிரத்னம் மற்றும் ஜெயந்திரா ஆகியோர் இணைந்து தயாரித்து நெட்ஃபிளிக்ஸில் வெளியாகியுள்ள படம் நவரசா. நவரசம் எனப்படும் 9 மனித உணர்வுகளை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்படும் இந்தப் படத்தை பிஜோய் நம்பியார், பிரியதர்ஷன், வசந்த், கார்த்திக் நரேன், அரவிந்த் சாமி, கௌதம் மேனன், கார்த்திக் சுப்புராஜ், சர்ஜூன், ரதிந்திரன் ஆர் பிரசாத் ஆகிய 9 இயக்குநர்கள் இக்கியுள்ளனர்.
இதையும் படிக்க | சினிமாவில் 50 வருடங்களை நிறைவு செய்த நடிகர் மம்மூட்டி
மேலும் சூர்யா, சித்தார்த், அரவிந்த் சாமி, விஜய் சேதுபதி, யோகி பாபு, பார்வதி, ரேவதி, பிரகாஷ் ராஜ், பிரசன்னா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்தப் படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான், ராஜேஷ் முருகேசன், சந்தோஷ் நாராயணன், கோவிந்த் வசந்தா, கார்த்திக், ஜஸ்டின் பிரபாகரன், விஷால் சந்திரசேகர், ரோன் எதன் யோகன், சுந்தரமூர்த்தி கேஎஸ் ஆகியோர் இசையமைத்துள்ளனர்.
இந்தப் படம் நேற்று (வெள்ளிக்கிழமை) நெட்ஃபிளிக்ஸில் வெளியாகியுள்ளது. இந்த நிலையில் மாடத்தி பட இயக்குநர் லீனா மணிமேகலை தனது சுட்டுரைப் பக்கத்தில், இயக்குநர் கௌதம் மேனனைக் குறிப்பிட்டு, ''காதல் என்ற பெயரில் போலியான பிம்பத்தைக் கட்டமைக்காதீர்கள்'' எனக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் ''பார்த்தா பன்னி மாதிரி இருக்கும், ஆனா அது நாய் தான். நம்ம வேலுச்சாமி'' என்ற இந்தத் தொடரில் ஹாஸ்யா என்ற படத்தில் இடம் பெற்ற வசனத்தை பகிர்ந்திருக்கும் அவர், இயக்குநர்கள் பிரியர்ஷன், மணிரத்னம், நெட்ஃபிளிக்ஸ் .ஆகியோரை தனது சுட்டுரையில் குறிப்பிட்டு அறுவறுக்கத்தக்க வகையில் இருக்கிறது என்று தெரிவித்துள்ளார்.
மற்றொரு பதிவில், நவரசா தொடரின் போஸ்டரை பகிர்ந்து, ''அமெரிக்காவில் சமூக நீதி பேசும் நீங்கள். இந்தியாவில் சாதியத்தை ஆதரிக்கிறீர்கள். கலை வளர்ப்பதற்காக பல இயக்குநர்களை முன் நிறுத்தி 10 வருடங்களுக்கு முன் தொடங்கிய நெட்ஃபிளிக்ஸ், இந்தியாவில் ஒரு குறிப்பிட்ட சாதிய ஆதரிப்பதாக அமைந்துள்ளதை நினைத்தால் வருத்தமாக இருக்கிறது'' என்றும் தெரிவித்துள்ளார்.