சூர்யா தயாரித்து, நடித்துள்ள ஜெய் பீம் திரைப்படம் கடந்த நவம்பர் 2 ஆம் தேதி வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. உண்மை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு உருவான இந்தப் படத்தை ஞானேவல் இயக்கியுள்ளார்.
இந்தப் படத்துக்கு ஷான் ரோல்டன் இசையமைக்க, எஸ்.ஆர்.கதிர் ஒளிப்பதிவு செய்துள்ளார். 1995 ஆம் ஆண்டு நடக்கும் இந்தப் படத்தில் அக்காலகட்டத்தை நினைவுபடுத்தும் விதமாக பேருந்துகள், பேருந்து நிறுத்தம், நீதிமன்றம் ஆகியவை சிறப்பாக வடிவமைக்கப்பட்டிருப்பதாக கலை இயக்குநர் கதிருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.
மேலும் இந்தப் படத்தில் ராஜா கண்ணுவாக மணிகண்டனும், செங்கேணியாக லிஜோமோல் ஜோஸும் வாழ்த்திருப்பதாக பாராட்டுகள் குவிந்து வருகின்றன. தமிழ் மட்டுமல்லாமல் பல்வேறு மொழி பிரபலங்களும் ஜெய் பீம் படத்தை பாராட்டி வருகின்றனர்.
அந்த வகையில் பிரபல தெலுங்கு நடிகர் நானி தனது ட்விட்டர் பக்கத்தில் ஜெய் பீம் படம் குறித்து பாராட்டு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தெரிவித்திருப்பதாவது, சூர்யாவின் ஜெய் பீம் பார்த்தேன். உங்களுக்கு என் மரியாதை சூர்யா சார். ராஜா கண்ணுவாக நடித்தவரும், செங்கேணியாக நடித்தவரும் சிறப்பாக நடித்துள்ளார்கள். இப்படி ஒரு சிறப்பான படத்தை கொடுத்ததற்காக படக்குழுவினருக்கு வாழ்த்துகள் என்று தெரிவித்துள்ளார்.