'திரௌபதி படம் எனக்குப் பிடிக்கவில்லை, ஆனால்...'': ருத்ர தாண்டவம் படம் குறித்து பிரபல இயக்குநர் அதிரடி

இயக்குநர் மோகன்.ஜியின் ருத்ர தாண்டவம் படம் குறித்து இயக்குநர் தங்கர் பச்சான் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். 
'திரௌபதி படம் எனக்குப் பிடிக்கவில்லை, ஆனால்...'':  ருத்ர தாண்டவம் படம் குறித்து பிரபல இயக்குநர் அதிரடி
Published on
Updated on
2 min read

திரௌபதி படத்துக்குப் பிறகு மோகன்.ஜி இயக்கியுள்ள படம் ருத்ர தாண்டவம். இந்தப் படத்தின் முன்னோட்டம் வெளியானதில் இருந்தே பரபரப்பு பற்றிக்கொண்டது. இந்த நிலையில் இந்த படம் வருகிற அக்டோபர் 1 ஆம் தேதி வெளியாகவுள்ளது. 

இந்த நிலையில், இந்தப் படத்தில் கிறிஸ்தவ மதத்தினருக்கு எதிரான காட்சிகள் இடம்பெற்றிருப்பதாகக் கூறி, இப்படத்திற்கு தடை விதிக்க வேண்டும் என சிறுபான்மை மக்கள் நல கட்சியின் தேசிய தலைவர் சாம் யேசுதாஸ் என்பவர் சென்னை 15 ஆவது உதவி உரிமையியல் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். 

இம்மனுவை விசாரித்த  நீதிபதி, மனு தொடர்பாகப் படத் தயாரிப்பு நிறுவனம் இன்று (வியாழக்கிழமை) பதிலளிக்குமாறு உத்தரவிட்டு, விசாரணையை வியாழக்கிழமை ஒத்திவைத்தார். 

இந்த நிலையில் இந்தப் படம் குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள ஒளிப்பதிவாளரும் இயக்குநருமான தங்கர் பச்சான், ஒரு படைப்பாளனாக இச்சமூகத்திற்கு உங்களின் கடமையை செய்தது போல், இத்திரைப்படத்தை ஒவ்வொரு மனிதனும் காண வேண்டியதும் ஒரு கடமை என உணர்கிறேன். 

உங்களின் முந்தைய திரைப்படம் திரௌபதி பெரும் வணிக வெற்றியை அடைந்திருந்தாலும், எனக்கு பிடித்தமானதாக இல்லை. அத்துடன் ருத்ர தாண்டவம் பார்த்து பாராட்டுபவர்களின் பட்டியலையும் அவர்களின் பாராட்டுக்களையும் காண நேர்ந்த பொழுது நான் இந்தப் படத்தை பார்த்துதான் ஆக வேண்டுமா எனவும் நினைத்தேன். படம் பார்த்து முடித்ததும் அவ்வாறு எண்ணியதற்காக இப்பொழுது வருந்துகிறேன். 

மக்கள் நாள்தோறும் சந்திக்கின்ற காண நேர்கின்ற இன்றைய சிக்கல்களைத் தான் காட்சிகளாக கருத்துக்களாக முன் வைக்கின்றீர்கள் என்பதால் இந்தப் படத்தை பார்த்தவர்களால் மற்றவர்களுடன் இதைப்பற்றி பகிர்ந்துகொள்ளாமல் இருக்க முடியாது. எப்படியாது இத்திரைப்படத்தை மக்கள் பார்க்க வேண்டும் என்பதற்காக அதிகமாகவே நீங்கள் பேசுவதை காண்கிறேன். இனி அது தேவையில்லை. இனி உங்களின் படைப்பு மக்களிடத்தில் பேசிக்கொள்ளும். 

மக்களின் பலவீனத்தை பணமாக்குவதற்காக பொழுதுபோக்கு எனும் போதைப்பொருளை திரைப்படங்களாக உருவாக்கி சமூகத்தை பின்னோக்கி சீரழிப்பவர்களுக்கிடையில் விழிப்புணர்வைத் தூண்டும் உங்களின் ருத்ர தாண்டவத்தை மக்கள் கொண்டாடி தீர்ப்பார்கள் என உறுதியாக நம்புகிறேன். 

ஒரு திரைப்படத்தின் வெற்றி முதலீடு செய்த தொகையை பல மடங்காக திருப்பி எடுப்பது மட்டுமல்ல, சமூகத்தை நல்வழிப் படுத்துவதற்கான விழிப்புணர்வுகளை விதைப்பதும் ஆகும். இத்திரைப்படம் குறித்த குறைகள் எனக்குத் தேவையில்லை. இவ்வணிகச்சூழலில் கிடைத்த நடிகர்களைக் கொண்டு கிடைத்த வசதி வாய்ப்புகளைக்கொண்டு எவரும் பேசத்துணியாதவைகளை திரை ஊடகத்தின் மூலமாக பல கோடி மக்களின் இதயங்களுக்கு கடத்தியிருக்கும் உங்களுக்கும் திரைப்பட குழுவினருக்கும் இம்மக்களில் ஒருவனாக எனது நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com